12ம் வகுப்பு ஆல் பாஸ் பண்ணி விடுங்க ஓபிஎஸ் அய்யா என்று துணை முதல்வரிடம் 12 ம் வகுப்பு மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.
தேனி :
வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி தேர்தல் என்பதால் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் பிற கட்சிகளை குறை கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர். தேர்தலுக்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் மிகவும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், தேனி மாவட்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக கூட்டணி காட்சிகளுக்கு ஆதரவாக தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பேசிய அவர், அதிமுக அரசு கிராமப்புறங்களில் இதுவரை 6.5 லட்சம் வீடுகளை கட்டித்தந்துள்ளது. மேலும், ஆட்சி முடிவதற்குள் 2,400 வீடுகள் கட்டித்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Read more – இன்றைய ராசிபலன் 21.03.2021!!!
கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் தமிழகத்தில் 45,000 கோடி ரூபாய் அளவில் தான் தொழிற்சாலைகளுக்கான முதலீடுகள் பெறப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் 6,85,000 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெறப்பட்டு 19 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி புதிய தொழிற்புரட்சியை உருவாக்கினோம் என்று தெரிவித்தார்.
அப்பொழுது, அந்த கூட்டத்தில் இருந்த 12 ம் வகுப்பு மாணவர்கள் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை பார்த்து ஓபிஎஸ் அய்யா, 12ம் வகுப்பு ஆல் பாஸ் பண்ணி விடுங்க அய்யா என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு உங்கள் கோரிக்கை குறித்து முதல்வரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அப்பொழுது மீண்டும் அந்த மாணவர்கள், விளையாட்டு மைதானம் வேண்டும் என்று தெரிவிக்க நிச்சயம் அமைத்து தருகிறேன் என்று கூறிவிட்டு ‘சமயம் பார்த்து வரிசையா அடிக்குறிங்களேப்பா’ என்று கூறினார். அங்கு கூடியிருந்த அனைவரும் சிரித்து கரகோஷம் எழுப்பினார்கள்.