அதிமுகவுடன் தொகுதி பங்கீடு விரைவில் தொடங்கும் என தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை :
தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற மிகப்பெரிய ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நடக்கும் தேர்தல் என்பதால் தேர்தல் களம் தொடர்ந்து சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மேலும் எந்த கட்சிகள் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது என்ற பரபரப்பான சூழ்நிலையும் நிலவி வருகிறது.
இந்தநிலையில், தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான கிஷன்ரெட்டி மற்றும் மத்திய அமைச்சர் வி.கே. சிங் ஆகியோர் நேற்று தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் எல். முருகனை சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர்.
அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய எல். முருகன் கூறியதாவது : இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் எப்படி செயல்பட வேண்டும், தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றும் ஆலோசித்தோம். அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும். அதன்பிறகு தான் பா.ஜ.க. எத்தனை தொகுதியில் போட்டியிடும் என்பது முடிவாகும் என்று தெரிவித்தார்.
Read more – அதிமுகவை காக்கா பிடித்து தமிழகத்தை கரம் பிடிக்க நினைக்கிறது பா.ஜ.க – மதுரையில் மு.க. ஸ்டாலின் பேச்சு
மேலும், புதுச்சேரியில் நடக்கும் குழப்பத்திற்கு பா.ஜ.க காரணம் இல்லை. அதற்கு புதுச்சேரி முதல்வரே காரணம் என்று தெரிவித்தார். அ.ம.மு.க. தனித்துப் போட்டியிடுவோம் என எங்கும் குறிப்பிடவில்லை. பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க. இடம் பெறுவது குறித்து பா.ஜ.க. தலைமை முடிவு செய்யும் என்றும், கொரோனா பரவல் காரணமாக தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என தெரிவித்தார்.