வேல் யாத்திரையில் நாங்கள் ஈடுபட்டபோது கிண்டல் செய்த தி.மு.க.வினர் இன்றைக்கு ஓட்டுக்காக ‘வேல்’ எடுத்து சுற்றுவதை மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள் என்று தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை :
தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சி கூட்டணி குறித்த பேச்சுகளும் சூடுப்பிடிக்கிறது. இதுகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது :
அதிமுக- பா.ஜ.க கூட்டணி வலுவாக இருக்கிறது. அதிமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்பு கட்சித் தலைமையின் அனுமதி பெற்று விரைவில் வெளியிடப்படும். அதோடு எச்.ராஜா தலைமையிலான பா.ஜ.க. தேர்தல் அறிக்கை குழுவினர் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சென்று மக்களை சந்தித்து கருத்துகளை கேட்டு வருகிறார்கள். அதன் அடிப்படையில் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியாகும் என்றார்.
தமிழகத்தில் சசிகலா நிலைப்பாடு என்னவென்று முதலில் அறிவிக்கட்டும். அதன்பிறகுதான் அது பா.ஜ.க கூட்டணியில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று சொல்லமுடியும், அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரங்களில் நான் தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
Read more – மக்களின் ஓட்டுக்காக ஒவ்வொரு வீட்டின் கேட்டை தட்டிய நடிகை : நடிகர் கமலுக்காக களத்தில் குதிக்கும் பிரபலம்
மேலும் திமுக பிரச்சாரம் குறித்து தொடர்ந்து பேசிய எல்.முருகன், மக்களை ஏமாற்றும் அரசியலை தி.மு.க. செய்துவருகிறது. நாங்கள் ‘வேல்’ தூக்கி யாத்திரையில் ஈடுபட்டபோது எங்களை கிண்டல் செய்த தி.மு.க.வினரே இப்போது பிரசாரத்தில் ஓட்டுக்காக வேல் தூக்கியிருக்கிறார்கள். இவர்களின் இந்த பிரச்சாரத்தை மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.