தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுகவுடன் கூட்டணி அமைக்க மதிமுக மற்றும் விசிக கட்சிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.
சென்னை :
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்த நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே அதிமுக கட்சி பாட்டாளி மக்கள் கட்சியுடன் 23 தொகுதிகளை பங்கீடு செய்துள்ளது.
மேலும், மத்தியில் ஆளும் பாஜகவுடன் பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தியும் வருகிறது. இந்தநிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மதிமுக மற்றும் விசிக இன்று திமுகவுடன் ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.
தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையில், ஆர்.எஸ்.பாரதி, ஐ.பெரியசாமி, பொன்முடி குழுவினர் தலைமையில் நேற்று (பிப்.28) மாலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடனும், அதைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியுடனும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.