தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்தாண்டு ஜனவரி 15-ந் தேதியன்று வெளியிடப்படும் என்றும், வரும் நவம்பர் 16-ந் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தங்கள் மற்றும் பெயர் சேர்த்தலை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
சட்டமன்ற தேர்தல்
தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான அரசின் பதவிக்காலம் அடுத்தாண்டுடன் நிறைவு பெற உள்ளது. இதனால், சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். தேர்தல் ஆணையமும் தங்களது பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதாப் சாஹூ இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
வாக்காளர் பட்டியல்
2020 – நவம்பர் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
இதையடுத்து 2021-ஆம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். நவம்பர் 14-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். புதிதாக விண்ணப்பிக்க வயதை நிரூபிக்கும் சான்றிதழ் மிகவும் அவசியம். www.nvsp.in என்ற இணைய தளம் மூலம் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளை செய்து கொள்ளலாம் என்றும், VOTER HELP LINE என்ற செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் திருத்தம், சேர்த்தல்
வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க அல்லது திருத்தம் செய்ய விரும்பும் வாக்காளர்கள் வேலை நாட்களில் அதிகாரிகளை தொடர்பு கொண்டு வயது பூர்த்தி அடைந்ததற்கான சான்றிதழ், தங்குமிடத்திற்கான சான்றிதழ், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை, குடிநீர் இணைப்பு, தொலை பேசி இணைப்பு, மின் இணைப்பு, சிலிண்டர் இணைப்பு, வங்கி, கிசான், தபால் நிலைய இணைப்பு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை சமர்ப்பிக்கலாம். 18 வயது பூர்த்தி அடைந்ததற்கு பள்ளிபடிப்பை நிறைவு செய்த சான்றிதழை பயன்படுத்திக் கொள்ளலாம். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் படிவம் எண் 6ஏவை கட்டயாயம் பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாக அனுப்ப வேண்டும். அத்துடன் பாஸ்போர்ட்டின் நகலையும் இணைக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.