தள்ளுவண்டி கடைகளில் இனி வாழை இலைதான் பயன்படுத்த வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சாலையோர தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சியானது பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில், உணவை பாதுகாப்பாக சமைப்பது மற்றும் பரிமாறுவது, தூய்மைப்பணிகள் குறித்து சாலையோர வியாபாரிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.அதில், ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மறுமுறை பயன்படுத்த கூடாது, பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தாமல் வாழை இலைதான் பயன்படுத்தவேண்டும் என்றும், கடைகளில் பணிபுரிவோர் கட்டாயம் முக கவசம், கையுறை அணியவேண்டும் என்றும், சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more – அரசு வாகனங்களிலிருந்து பம்பர் கம்பிகளை உடனடியாக நீக்க வேண்டும் : தலைமை செயலாளர் உத்தரவு
மேலும், சூடான உணவுகள் பிளாஸ்டிக் கவரில் பரிமாறப்படும் போது அது நச்சாக மாறுகிறது. இதனால் வாழை இலைதான் பயன்படுத்த வேண்டும். சாலையோரங்களில் குப்பைதொட்டி, கழிவறை, திறந்த சாக்கடை அருகில் கடை வைக்கவே கூடாது. வியாபாரிகள் வேலைபார்க்கும் போது பாக்கு, வெற்றிலை, புகையிலை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சிக்கன், மட்டன் துண்டுகளை வண்டியில் அழகுக்காக தொங்கவிடக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, உணவு கலப்படத்தை கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு, அதில் கலந்துகொண்ட சாலையோர வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.