பிப்ரவரி 2-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம் என தமிழ்நாடு அரசு மாநிலத் தலைவர் அன்பரசு அறிவித்துள்ளார்.
சென்னை:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.அன்பரசு, செய்தியாளரிடம் கூறியதாவது :
அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்த ஜாக்டோ ஜியோவின் போராட்டம் 2019-ம் ஆண்டு நடத்தப்பட்டது. ஜனவரி 22-ந் தேதி முதல் 10 நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டோம். கோர்ட்டு தலையிட்டதன் காரணமாக பணிக்கு திரும்பினோம். தமிழ்நாடு முழுவதும் 5,068 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்குகளை இந்த அரசு பதிவு செய்தது. அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை. ஓய்வு பெற்றால் பென்ஷன் கிடைப்பதில்லை.
இதுகுறித்து அரசுக்கு நாங்கள் பல முறை கோரிக்கை வைத்தோம். ஆனாலும் எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால் மீண்டும் போராடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். எங்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். ஒழுங்குமுறை நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் பிரசார இயக்கம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
Read more – “டவர்களை அடித்து நொறுக்கிறார்கள்” : பஞ்சாப் அரசிடம் முறையிடும் ஜியோ நிறுவனம்
ஜனவரி 19, 20 தேதிகளில் மண்டல அளவில் போராட்ட ஆயத்த மாநாடு நடத்துவது என்றும், ஜனவரி 27-ல் மாநில அளவிலான போராட்ட ஆயத்த மாநாட்டை மதுரையில் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். பிப்ரவரி 2-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தொடர் மறியல் போராட்டம் நடத்தி சிறைகளை நிரப்புவது என்று முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.