சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் மீதான பாலியல் தொல்லை புகார் விசாரணை நாளை விழுப்புரத்தில் தொடங்குகிறது.
முதல்வர் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு அவரது மேலதிகாரியான சிறப்பு டிஜிபி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. அதுகுறித்து அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபி திரிபாதியிடமும், உள்துறைச் செயலரிடமும் புகார் அளித்ததார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.க்கு ஆதரவாக சம்பந்தப்பட்ட சிறப்பு டிஜிபி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பலரும் குரல் கொடுத்தனர். இந்நிலையில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி குறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் உள்ள பெண் அதிகாரி தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவர் வகித்துவந்த சிறப்பு டிஜிபி பதவியும் நீக்கப்பட்டது. இந்நிலையில் இப்புகார் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க டி ஜி பி திரிபாதி உத்தரவிட்டார். இதையடுத்து விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி ஏடி எஸ்பி கோமதி தலைமையிலான போலீஸார் விசாரித்து அறிக்கை அனுப்ப உத்த்கரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்றது விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட பகுதி என்பதால் இம்மாவட்ட போலீஸாரை நாளை முதல் விசாரித்து விசாரணை அறிக்கையை சென்னை சிபிசிஐடி போலீஸாருக்கு அனுப்பி வைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.