மாநில அரசுக்கு ஒத்துழைக்க வேண்டியது பாஜகவின் கடமை என்று மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டு துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.
சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில்கலந்துகொண்ட வந்த தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டு துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறும்ம்போது, “ மாநில அரசுக்கு ஒத்துழைக்க வேண்டியது பாஜகவின் கடமை. அவர்கள் தற்போது செய்து வரும் செயல் மக்களிடம் நல்ல முறையில் போய் சேருகிறதா? என்பதை அவர்கள் பார்க்க வேண்டும். அவர்களின் அரசியல் ரீதியான நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவும் கிடையாது. எதிர்ப்பும் கிடையாது.
கொரோனா காலத்தில் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதைத்தான் எடுத்து வருகிறது. பாஜக தற்போது மேற்கொண்டு வரும் செயல்கள் மக்கள் நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய செயல்கள் என்ற எண்ணம் மக்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான் எனது எண்ணம். 100 பேருக்கு மேல் ஒன்று கூடினால் கைது செய்ய வேண்டும் என்பது தற்போது கொரோனா காலத்தில் உள்ள ஊரடங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. அதைத்தான் வேல் யாத்திரை விவகாரத்தில் தற்போது நாங்கள் செய்து வருகிறோம். இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை.
பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையில் அரசு நல்ல முடிவை எடுத்து பொதுமக்களுக்கு அறிவிக்கும்’ என்றார்.