ஏழ்மை நிலையில் மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பிரபலங்கள் உதவ முன் வர வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வு இன்றுடன் முடிவடைந்த நிலையில், தமிழக அரசின் முயற்சியால் 7.5% உள் ஒதுக்கீடு அடிப்படையில், அரசு பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேரவிருக்கின்றனர். இதன் முதற்கட்டமாக நேற்று 18 மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கைக்கான ஆணையும் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு கிட்டத்தட்ட 86 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனியார் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளதாக தெரிகிறது.
ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் தனியார் மருத்துவ கல்விக்கட்டணத்தைக் குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என்று நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கிரஹாம்பெல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘பொருளாதாரம் மற்றும் குடும்ப சூழலால், மாணவர்கள் தங்கள் கனவான மருத்துவப் படிப்பை பாதியிலேயே கைவிடுவது மிகுந்த வேதனைக்குறியது. எனவே, ஏழ்மை நிலையில் மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நடிகர்கள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் போன்ற பிரபலங்கள் உதவ வேண்டும். இவர்கள் மாணவ-மாணவியரை தத்தெடுத்து, அவர்களுடைய மருத்துவ படிப்புக்கான கட்டணத்தை ஏற்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.’
மேலும், சுயநிதி கல்லூரிகளின் கட்டண நிர்ணயக்குழு, சுகாதார செயலாளர் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் பதிலளிக்க ஆணையிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.