ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்டம் இயற்றுவதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்? என பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அதிகரித்துள்ள ஆன்லைன் சுதாட்டங்களால் பணம் இழந்த பலர் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகி உள்ளது. தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திர ஆகிய இடங்களிளும், ஆன்லைன் சூதாட்டதால் பணத்தை இழந்த மன அழுத்தத்தால் சிலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதனிடையே, ஆன்லைன் ரம்மியை தடை செய்யக் கோரிய மனுக்கள், நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதை முதலமைச்சரே தெரிவித்திருப்பதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதிக முக்கியத்துவத்துடன் அரசு இந்த விவகாரத்தை கையாள்வதாகவும், சட்ட வரைவு தயாரிக்கப்பட உள்ளது என்றும்,
தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் இல்லை என்பதால், மசோதாவை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க முடியவில்லை எனவும் பதில் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, சினிமா நடிகர்களை அப்படியே பின்பற்றும் நிலை தமிழகத்தில் அதிகம் உள்ளது என்று கூறிய நீதிபதிகள், பிரபலமானவர்கள் பலர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு விளம்பரம் செய்வதையும் குறிப்பிட்டு கவலை தெரிவித்தனர்.
நாள்தோறும் உயிர்கள் பலியாகும் நிலையில், விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்வதற்கு, அது தொடர்பான சட்டம் இயற்றுவதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்? சட்டமாக இயற்றப்பட உள்ளதா? விதியாக அமல்படுத்தப்படுமா? என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? என்பது குறித்து அரசுத்தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டனர்.