கொரோனோ பரிசோதனை முடிவுகளை எஸ்.எம்.எஸ் மூலமாக அறிந்துகொள்ளும் வசதியை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று துவக்கி வைத்தார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பரிசோதனை முடிவுகளை எஸ்.எம்.எஸ் மூலமாக அறியும் வசதியை, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும், எனவே பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைப் பின்பற்றி கொரோனா தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், கொரோனா பரிசோதனை செய்து கொள்வோரின் தொலைபேசிக்கு, 24 மணி நேரத்தில் எஸ்.எம்.எஸ் மூலம் பரிசோதனை முடிவுகள் அனுப்பும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது எனவும், எம்.ஆர்.எப். நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி கார்களை, பயன்பாட்டிற்காக துவக்கி வைத்துள்ளதாகவும், அவர் கூறினார்.