இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் இறந்தவர்களின் உடல்களை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தோண்டி எடுத்து திருவிழா போல கொண்டாடுகின்றனர்.
சுலாவெசி என்பது இந்தோனிசியா தீவுகளில் ஒன்று. 2005 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்த தீவில் ஏறத்தாழ 16 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
இந்த தீவில் மூன்று வருடத்திற்கு ஒரு முறை ஆகஸ்ட் மாத இறுதியில் தங்கள் முன்னோர்களின் புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுத்து மானேன் எனப்படும் வித்தியாசமான திருவிழா கொண்டாடப்படுகிறது.
புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுத்து சுத்தம் செய்து குளிப்பாட்டி புது துணிகளை போட்டு கொண்டாடுகின்றனர். இதனை சடலங்களை சுத்தம் செய்யும் விழா என்றும் சொல்கின்றனர்.
இந்த நிகழ்வானது இந்த தீவின் பாராப்பு என்னும் கிராமத்தில் முதன் முதலாக கடைபிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. ஒரு முறை வன விலங்கு வேட்டையாளர் ஒருவர் காட்டிற்குள் சென்று கொண்டிருக்கும் போது ஒரு குகையில் ஆதரவற்ற ஒரு மனிதனின் பிணத்தை பார்க்கிறார். அந்த பிணத்தை குளிப்பாட்டி அலங்கரித்து முறையான ஈம சடங்குகளை செய்கிறார். இதனால் அந்த ஆத்மா மகிழ்ச்சியடையும் அதன் மூலம் அவருக்கு கடவுளின் அருள் கிடைக்கும் என நினைக்கிறார். இந்த நிகழ்வினையே இந்த பகுதி மக்கள் இவ்வாறு கொண்டாடுகின்றனர்.
இங்கு ஒரு மனிதன் இறந்து விட்டால் உடனே ஈமச்சடங்குகளை செய்வதில்லை. இறந்தவருக்கு அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்கள் தகுந்த மரியாதையை அளித்து அனுப்புகின்றனர். இதற்காக இவர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக கூட எடுத்துக்கொள்கின்றனர்.முதலில் இதன் தொடக்கமாக காளைகளையும் எருதுகளையும் பலியிடுகின்றனர். அதன் கொம்புகளைக் கொண்டு இறந்தவரின் வீடுகளை அலங்கரிக்கின்றனர். ஒருவரின் வீடு எந்த அளவுக்கு கொம்புகள் கொண்டு அலங்கரிக்கப்படுகின்றதோ அந்த அளவுக்கு அவருக்கு மரியாதை என நம்புகின்றனர்.
டோராஜா பழங்குடி மக்கள் மிகவும் அரிதாகவே நிலத்தில் புதைக்கப்படுகிறார்கள். இந்த கிராமம் மலை மீது அமைந்திருப்பதால் சவப்பெட்டிகளை வைப்பதற்காகவே குகைகள் வெட்டப்படுகின்றன. மேலும் உடல்கள் சிதைவுறாமல் இருக்க பல துணிகளை வைத்து உடல் சுற்றப்படுகின்றது.
இந்த கிராமத்தில் ஈமச்சடங்குகள் காலதாமதமாக செய்யப்படுவதற்கு மற்றுமோர் காரணம் இவர்களின் ஈமச்சடங்குகள் அதிக செலவில் செய்யப்படுவதால் பணம் சேரும் வரை உடலை பாதுகாத்து வைக்கின்றனர். இறந்தவரின் உடல்களை குளிப்பாட்ட அலங்கரிக்க இவர்கள் ஒரு போதும் முகம் சுளிப்பதில்லை.
இறந்தவர்களை அடக்கம் செய்யும் வரை அவர்களது உடல் ஒரு குகையில் வைக்கப்படுகின்றது. அதை காப்பதற்கு ‘தவு தவு’ எனப்படும் மரபொம்மைகள் வைக்கப்படுகின்றது. ஏனெனில் இவர்கள் அடக்கம் செய்யும் வரை அந்த நபர் இறந்துவிட்டதாக ஊர்வாசிகள் நம்பாததால் அந்த உடலை நோய் வாய்ப்பட்டிருப்பவர் அல்லது தூங்கி கொண்டிருப்பவர் என்று குறிப்பிடுகின்றனர்.
அடக்கம் செய்யப்பட்டவர்களை ஒவ்வொரு மூன்று வருடத்திற்கும் ஒரு முறை ஆகஸ்ட் மாத இறுதியில் வீட்டிற்கு கொண்டு வந்து சுத்தம் செய்து குளிப்பாட்டி புத்தாடை உடுத்தி அலங்கரித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டு திருவிழா போல கொண்டாடுகின்றனர்.
இறப்பு என்பது நம்மை பொறுத்த வரை மிகப்பெரிய இழப்பாக மனதை தாக்கி அது நம்மை விட்டு நீங்க பல காலங்கள் எடுக்கின்றன. ஆனால் இம்மக்கள் இறந்தவர்களை கொண்டாடுகின்றனர். இறந்து அடக்கம் செய்து விட்டால் அதோடு முடிந்தது என்று இல்லாமல் இறந்து பின்னும் அந்த மனிதர்களை பெருமைப்படுத்துகின்றனர். இது மிகவும் விநோதமானது என்றாலும் இப்படி ஒரு நிகழ்வு நடந்தால் மரணத்தை எண்ணி யாருக்கும் பயம் இருக்காது என்பதே உண்மை.