முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் தெரிவித்தார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது.
வெற்றிக்குப் பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறும்போது, ‘எங்கள் அணியின் ஒவ்வொரு ஆட்டத்திலும் எனது இதய துடிப்பு புதிய உச்சத்துக்கு செல்கிறது. இந்த ஆட்டத்தை 19-வது ஓவரிலேயே வெற்றிகரமாக முடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மும்பை அணிக்கு எதிராக இரண்டு சூப்பர் ஓவர் முடிவில் கிடைத்த வெற்றிக்குப் பிறகு, அன்றையதினம் இரவில் நீண்ட நேரம் நான் தூங்கவில்லை. இந்தப் பரபரப்பு, நெருக்கடியான சூழலுக்கு முன்பே அதாவது சூப்பர் ஓவருக்கு முன்னதாகவே எப்படி போட்டியை முடித்து இருக்க வேண்டும் என்பது குறித்து அதிகமாக சிந்தித்தேன்.
எங்கள் அணியின் சீனியர் வீரரான முகமது ஷமி ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவரது பந்துவீச்சு மற்ற வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கிறது. மேக்ஸ்வெல் நன்றாக பேட்டிங் செய்தார். அவருக்கு நாங்கள் ஆதரவாக இருக்க வேண்டும். அடுத்து வரும் போட்டிகளிலும் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று நம்புகிறோம். இனி வரும் போட்டிகளிலும் வெல்வோம்’ என்றார்.