நான் கட்சியில் சேரப் போகிறேனா…. அரசியலா… ஆளை விடுங்கப்பா…. அதெல்லாம் வெறும் புரளி என்று நடிகர் வைகைப்புயல் வடிவேலு தெரிவித்தார்.
தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்தவர் வடிவேலு. 90-களில் திரையுலகுக்கு வந்த நடிகர் வடிவேலு, மிகப்பெரிய இடத்தைப் பிடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
தற்போது அனைத்து டி.வி. சேனல்களிலும் இவர் இல்லாத நகைச்சுவை காட்சிகளே இல்லை என்ற அளவுக்கு தினமும் ஒளிபரப்பாகி வருகின்றன.
ஆனால் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இவர் படங்களில் நடிக்காமல் இருக்கிறார். எலி, தெனாலிராமன் உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இருப்பினும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறார் வடிவேலு.
இந்நிலையில், வடிவேலு பா.ஜ.க. கட்சியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
சமீபகாலமாக தமிழ் சினிமா நட்சத்திரங்களான கங்கை அமரன், ராதாரவி, நமீதா, காயத்ரி ரகுராம், குஷ்பு உள்ளிட்டோர் தேசிய கட்சியான பா.ஜ.க.வில் இணைந்து இருக்கின்றனர். இதனால், வடிவேலுவும் கட்சியில் இணைந்திருப்பதாக செய்திகள் வெளியானது.
இது தொடர்பாக, வடிவேலுவிடம் கேட்டபோது, “ நான் பா.ஜ.க.வில் இணைந்து விட்டேன் என்று சொல்கிறார்கள். அரசியலா, கட்சியா அதெல்லாம் இல்லை. அது எல்லாம் புரளி. அதையெல்லாம் நம்பாதீர்கள்” என்றார் அவர்.