திருமாவளவன் மட்டும்தான் பெண்களுக்கு எதிராக பேசினாரா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
செப்டம்பர் மாதம் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், மனுதர்மத்தில் அனைத்து பெண்களும் கீழானவர்கள் என கருதப்படுகிறார்கள். அனைத்து பெண்களும் பரத்தையர் களாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
ஆனால், திருமாவளவன் பெண்களுக்கு எதிராக பேசிவிட்டதாக பாஜகவினரும், இந்து அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டனர். மனுதர்மம் பெண்களை எவ்வாறு கொச்சைப்படுத்துகிறது என்றே தான் கூறியதாக திருமாவளவன் விளக்கினார். இதுதொடர்பாக திருமாவளவன் மீது மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் பெண்களை இழிவுபடுத்தியதாக திருமாவளவன் மீது குற்றம்சாட்டி அவர் மீது நாடாளுமன்றச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று நீதிபதி சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தபோது, திருமாவளவனுக்கு எதிரான புகார்களின் விசாரணையும் இரண்டு மாதங்களின் நிறைவடையும் எனவும், மனுஸ்மிருதி குறித்த அவரின் பேச்சை காண்பதற்கு தடை செய்ய கூகுளுக்கு வலியுறுத்தியதாகவும் அரசு தரப்பு விளக்கம் அளித்தது.
ஒரு விஷயத்தைப் பற்றி பேசும்போது ஒரு அனுபவமுள்ள அரசியல்வாதி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட, “ஆர அமர விவாதிக்கவோ அல்லது நிதானமாக பேசவோ இது ஒரு செய்தி சேனல் அல்ல. சட்டப்பூர்வ வாதங்களை மட்டும் முன்வைக்க வேண்டும்” என்று அவருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
அத்துடன், திருமாவளவன் மட்டும்தான் பெண்களை இழிவுபடுத்தினாரா என்றவர், நீங்கள் ஏன் மற்றவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யவில்லை என்ற கேள்வியை முன்வைத்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதை அடுத்து, வழக்கின் தீர்ப்பையும் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார் நீதிபதி.