ரஜினிகாந்துக்கு மருத்துவர்கள் வழங்கிய அறிவுரை, அவர் கட்சி ஆரம்பிப்பாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை ஜனவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளதாகக் குறிப்பிட்டு, அதற்கான விவரங்களை டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடுவேன் என அறிவித்தார். அதன்பிறகு அண்ணாத்தே படப்பிடிப்பில் தீவிரமாக நடித்து வந்த நிலையில், அங்கு 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனினும், ரஜினிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை.
சீரற்ற ரத்த அழுத்தம் மற்றும் சோர்வு காரணமாக ரஜினிகாந்த் ஐதராபத்திலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று பிற்பகல் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ரஜினிகாந்துக்கு மருத்துவ குழுவின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது ரத்த அழுத்தம் தற்போது நிலையாக உள்ளது. அவர் நலமாகவும் இருக்கிறார். உடல்நலம் முன்னேற்றம் அடைந்ததை கருத்தில் கொண்டு அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என்று தெரிவித்தது.
read more:
மேலும், “சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தது, உயர் ரத்த அழுத்தம், வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு மருந்து மற்றும் உணவுகளுடன் இரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் பொருட்டு 1 வாரம் ஓய்வு எடுக்க வேண்டும். கொரோனா தொற்று தாக்கும் அபாயத்தை அதிகரிக்கும் எந்தவொரு செயலை தவிர்க்க வேண்டும்” என அவருக்கு மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இந்த சூழலில் ரஜினி கட்சி ஆரம்பித்து பிரச்சாரம் செய்தால் கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதன் காரணமாகவும், மருத்துவர்கள் பரிந்துரை அடுத்தும் ரஜினி கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.