சென்னையில் நாளை நடைபெற இருந்த திமுக கூட்டணி கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 22 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக 6 முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
சில திருத்தங்களை மட்டுமே மேற்கொள்வோம், சட்டத்தை திரும்பப் பெற முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவிப்பதால் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதனிடையே விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 18ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என திமுக கூட்டணி அறிவித்தது. அதில், திமுக கூட்டணியின் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பங்குபெறுவார்கள் எனவும் தெரிவித்தது.
read more: எதேச்சதிகாரமான முடிவு: கூட்டத் தொடர் ரத்துக்கு திமுக எதிர்ப்பு!
இந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளது சென்னை மாநகர காவல் துறை. தொற்றுநோய் தடுப்பு சட்டம் மற்றும் சென்னை காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், போராட்டம் நடத்துவதற்கு 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா ஊரடங்கு தளர்வுகளில், பொது இடங்களில் ஒன்று கூடி போராட்டம் – ஆர்ப்பாட்டம் நடத்த இன்னும் தடை உள்ளதாலும், இந்த அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்றே தெரிவிக்கிறார்கள் திமுகவினர்.