வங்க கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் புதுச்சேரி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு கரையை கடந்தது.
அதைத்தொடர்ந்து நிவர் புயல் வடமேற்கு பகுதியை நோக்கி நகர்ந்தது. அதனால் வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு 8 மணி வரை மிதமான மழையும், இரவு 10 மணிக்கு மேல் மழையின் வேகம் அதிகரித்தது. விடிய, விடிய மழை தொடர்ந்து வெளுத்து வாங்கியது. காலை 9 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 17 செ.மீ. மழை அளவு பதிவாகியிருந்தது. வேலூர், அம்முண்டி சர்க்கரை ஆலை, காட்பாடி பகுதியில் அதிகளவு மழை பெய்திருந்தது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலையில் இருந்து மிதமான காற்றுடன் பலத்த மழை பெய்தது. குறிப்பாக காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேலூரில் பல இடங்களில் இடைவிடாது மழை வெளுத்து வாங்கியது. சில சமயங்களில் இடி சத்தம் கேட்டது. தொடர்ச்சியாக வேலூர் மாநகரில் மதிய வேளையில் பலத்த காற்று வீச தொடங்கியது. அதனால் மழையின் வேகமும் அதிகரித்தது. நேரம் செல்ல செல்ல மழையின் தீவிரமும், காற்றின் வேகமும் கூடியது. மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 8 மணி நேரத்தில் 67 செ.மீ. மழையளவு பதிவானாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிகபட்சமாக பொன்னையில் 16 செ.மீ. மழை பெய்திருந்தது.
பொதுவிடுமுறை காரணமாக சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன. ஒரு சில ஓட்டல்கள், டீக்கடைகள் மட்டும் திறந்திருந்தன. கனமழை காரணமாக வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளான அண்ணாசாலை, காட்பாடிசாலை, ஆற்காடுசாலை, ஆரணிசாலை, பெங்களூரு சாலை மற்றும் சத்துவாச்சாரி பகுதிகள் மழை வெள்ளத்தில் தத்தளித்தது. வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகேயுள்ள காவலர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை வெள்ளம் சூழந்தது. பல இடங்களில் ஆறுபோன்று மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
காட்பாடியை அடுத்த மேல்பாடி அருகே உள்ள மாதாண்டகுப்பம் ஏரி கரை நேற்று மதியம் 1.30 மணியளவில் திடீரென உடைந்து, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது இதனால் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். அணைக்கட்டு அடுத்த இலவம்பாடியில் சாலையோரம் இருந்த ஒரு புளியமரமும், குடிசை கிராமத்தில் சாலையோரம் இருந்த இரு புளிய மரங்களும் வேரோடு சாய்ந்தன. மரங்கள் விழுந்தபோது, அருகில் இருந்த மின் கம்பங்களும் சரிந்தன. குடிசை கிராமத்தில் ஒரு புளியமரம் சாய்ந்த நேரத்தில் அந்த வழியாக சென்ற ஒரு கார் அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து தப்பியது. காரில் பயணம் செய்த 4 பேர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். புளிய மரம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இலவம்பாடி மற்றும் ஊசூர் வழியாக செல்லும் வாகனங்கள் 4 மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தப்பட்டு இருந்தன.
ஜவ்வாதுமலைத் தொடரில் இருந்து உருவாகி மேல்அரசம்பட்டு வழியாக ஓடும் உத்திரகாவேரி (அகரம்) ஆற்றில் கடந்த 3 ஆண்டுகளாக வெள்ளம் வராததால் விவசாயம் பாதிக்கப்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. நிவர் புயல் மழை காரணமாக நேற்று இரவில் இருந்து உத்திரகாவேரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் மேல்அரசம்பட்டு பகுதிக்கு விரைந்து வந்து, அங்குக் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உத்திரகாவேரி ஆற்று கரையோரம் வசித்து வரும் மக்களை அங்கிருந்து வெளியேற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வேலூரில் இருந்து பாலமதி செல்லும் மலைப்பாதையில் ஒரு வளைவு பகுதியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த பகுதியில் இருந்த பாறையும் உருண்டு சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு பெரிதும் ஏற்பட்டது.
பலத்த காற்றினால் வேலூர் தாலுகா சிங்கிரிகோவில் கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த 10 ஏக்கர் வாழைமரங்கள் சரிந்து பெரும் சேதமடைந்தது. மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் முதல்கட்டமாக 15 ஏக்கர் வாழைமரங்கள் சேதமடைந்துள்ளன என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மழையினால் 38 மரங்கள் சரிந்து விழுந்தன. அவற்றை மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து அப்புறப்படுத்தினர்.
வேலூர் மாவட்டத்தில் பெரும் பொருட்சேதமோ, எவ்வித உயிர்சேதமோ ஏற்படவில்லை என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
நாள் முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக வேலூர் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.