தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் இலங்கை தாதாக்கள் நடமாட்டம் உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை தாதாக்கள்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கையின் பிரபல தாதா அங்கொடா லொக்கா தமிழகத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த வாரம் இலங்கையின் மற்றொரு பிரபல தாதா பொன்சேகா என்பவரும் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இண்டர்போல் எச்சரிக்கை
இந்த நிலையில், இலங்கையைச் சேர்ந்த சுமார் 10 தாதாக்கள் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக சர்வதேச போலீஸான இண்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பதுங்கி இருக்கும் இலங்கை தாதாக்களை பிடிக்க கியூ பிரிவு போலீஸார் தீவிரநடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கொட லொக்கா மற்றும் பொன்சேகா ஆகியோருக்கு உதவி செய்தவர்களை பிடித்து கியூ பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் இலங்கை நபர்கள் வசிக்கும் பகுதிகளிலும், முகாம்களிலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் இருந்து வரும் தொலை பேசி தகவல்களை கண்காணித்து, அதனடிப்படையில் சந்தேக நபர்கள் சிலரையும் விசாரித்து வருகின்றனர்.
அகதிகள் முகாம்
இலங்கையில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தவர்களில் விசா காலம் முடிந்தும், திரும்பி செல்லாமல் இருக்கும் நபர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 13 பேர் விசா காலம் முடிந்தும் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் தற் போது தமிழகத்தில்தான் இருக்கிறார்களா? அல்லது வேறு பகுதிகளுக்கு இடம்மாறி விட்டார்களா? என்று விசாரணை நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், அரசின் அனுமதி இல்லாமலும் யாரும்தங்கி இருக்கிறார்களா, முகாம்களில் அனுமதிக்கப்பட்ட நபர்களை விடவும் கூடுதலாக யாரும் தங்கி இருக்கிறார்களா என்பது குறித்தும் கியூ பிரிவு போலீஸார் மற்றும் அந்தந்த பகுதி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்..