கொரோனா விதிகளை மீறி எருமைக்கு பிறந்த நாள் கொண்டாடியவர் மீது தானே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்தவர் கிரண் மேத்ரி (30).
இவர் தனது வீட்டில் எருமை உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று எருமை கன்று ஒன்றுக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.
இதற்காக தனது நண்பர்களுக்கு அழைப்பு கொடுத்தார். அவர்களும் எருமையின் பிறந்த நாள் விழாவிற்கு வந்திருந்தனர்.
எல்லோரும் ஒன்றாக சேர்ந்து எருமையை குளிக்க வைத்து, அதனை அலங்காரம் செய்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.
தகவலறிந்த சுகாதாரத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள், கிரண் மேத்ரி உள்ளிட்ட சிலர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இதுகுறித்து தானே போலீசார் கூறுகையில், ‘தானே சுற்றுவட்டார பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு கடுமையான விதிகளை அமல்படுத்தி உள்ளது.
எனவே கொரோனா விதிகளை பின்பற்றாமல் நண்பர்களுடன் சேர்ந்து எருமைக்கு பிறந்தநாள் கொண்டாடியது தவறு. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் எவரும் முகக்கவசம் அணியவில்லை.
சமூக இடைவெளி பின்பற்றவில்லை. எனவே, கொரோனா வழிகாட்டுதல்களை மீறியதற்காக கிரண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை’ என்றனர்.