துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திய 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயிலிருந்து மீட்பு விமானத்தில் இருந்து சென்னைக்கு பல லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு துபாயிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமான பயணிகள் எல்லோரையும் தீவிரமாக சோதனை செய்தனர்.
ஆனால் தங்கம் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து விமான நிலைய கழிவறை, குப்பை தொட்டிகளை சோதனையிட்ட போது முதல் தளத்தில் ஏரோபிரிட்ஜ் அருகே உள்ள ஆண்கள் கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் தங்க கட்டிகள் அடங்கிய பார்சல் மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. அதை எடுக்க வருபவரை கையும் களவுமாக பிடிக்க காத்திருந்தனர்.
இந்நிலையில், அதிகாலை 4.30 மணியளவில் விமான நிலைய ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், அந்த கழிவறையை சுத்தம் செய்வதுபோல் நடித்து அந்த பார்சலை வெளியே எடுத்து செல்ல முயன்றுள்ளனர். அவர்களை அதிகாரிகள் சுற்றிவளைத்தனர். பின்னர் அந்த விமானத்தில் கடத்தப்பட்ட தங்கம் தான் இது என தெரியவந்தது. மொத்தம் 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மொத்த மதிப்பு ரூ.3.68 கோடி.