அ.தி.மு.க. ஆட்சியில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள், பெறப்பட்ட முதலீடுகள் மற்றும் கொரோனா கொள்முதலுக்கான வெள்ளை அறிக்கையை வெளியிடுவது எப்போது? என்று முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் கடன் அ.தி.மு.க. ஆட்சியில், மாநிலத்தின் கடன் 4.56 லட்சம் கோடியைத் தாண்டி, இந்த ஆண்டில் மேலும் 50 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன. சந்தையில் இன்னும் கடன் வாங்கிக் கொள்கிறோம் என்று ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநிலத்தின் நிதி உரிமையை ‘சரண்டர்’ செய்திருக்கிறார் முதல்வர்.
இதுவரை நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாடுகளில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்னவென்றே மக்களுக்குத் தெரியவில்லை. அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி கண்ட முதல்வர், முதலீடுகளை ஈர்த்து விட்டோம், புதிய தொழில்களைத் தொடங்கி விட்டோம் என்றதற்கு கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
நிர்வாக தோல்வி: இன்றைக்கு நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் இரண்டாவது மாநிலம் தமிழகம். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அரசின் தோல்வியை மறைக்க, பொய் சொல்லும் நிலைக்கு அ.தி.மு.க. அரசு வந்துவிட்டது.
வெள்ளை அறி்க்கை
தனது கொரோனா நிர்வாகத் தோல்வியைத் திசைதிருப்ப, முதல்வர் போடும் நாடகங்கள் எடுபடாது. அ.தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் மற்றும் இளைஞர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கொரோனா கொள்முதல்கள் குறித்து தனியாக ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். வெள்ளை அறிக்கைகள் எப்போது வரும்?
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.