வேளாண் சட்டங்களுக்கு பின்னால் இருக்கும் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி:
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடும் குளிர் மற்றும் மழைக்கு இடையில் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். ஏற்கனவே நடந்த 7 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்த நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) விவசாய அமைப்பினருடன் 8 கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
இந்தநிலையில், நேற்று ஒரு சில விவசாய அமைப்பினர்கள் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமரை சந்தித்து ஆதரவு தெரிவித்து கலந்துரையாடினார். அதன் பிறகு மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது :
நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளின் நலன்களையும் பாதுகாக்க மத்திய அரசு போராடி வருகிறது. அதனால் தான் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். வேளாண் சீர்திருத்தங்களுக்கு பின்னால் உள்ள உணர்வுகளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உணர வேண்டும். விவசாயிகள் வேளாண் சட்டங்கள் குறித்து விரைவில் உணர்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை மூலம் முடிவுகட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நாடு முழுவதிலும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு நன்றியும் தெரிவித்தார்.