மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள சிட்டி சென்டர் மாலில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, மாலுக்கு அருகில் இருந்த குடியிருப்பில் வசித்த சுமார் 3,500 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதில் 2 தீயணைப்பு வீரர்கள் காயம் அடைந்தனர்.
மராட்டிய மாநிலம் மும்பையில் நகபடா என்ற நகரில், சிட்டி செண்டர் மால் அமைந்துள்ளது. இந்த மாலில் நேற்று இரவு சுமார் 8.15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதலில் இரவு 8.53 மணியளவில் லெவல்-1 என்ற அளவில் இருந்த தீ, சிறிது நேரத்தில் லெவல்-3 ஆகவும், பின்னர் லெவல்-5 என படிபடியாக அதிகரித்தது.
இதையடுத்து, தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ அதிகரிக்கவே, இன்று அதிகாலை 2:41 மணிக்கு கூடுதல் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.இந்த விபத்தில் 24 தீயணைப்பு வாகனங்களும், 16 ஜம்போ டேங்கர்கள் மற்றும் சுமார் 250 வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, மாலின் அருகில் இருந்த 55 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த சுமார் 3,500 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். மேலும், அருகாமையில் உள்ள கட்டிடங்களில் வசிக்கும் மக்கள் அனைவரும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளனர். கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைக்கும் முயற்சியின் போது, தீயணைப்பு வீரர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து எரிந்து வரும் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.