மதியம் 3 மணி… பெரிய நகரமும் இல்லாத கிராமமும் இல்லாத எங்கள் ஊர் பேருந்து நிலையம். வெறிச்சோடிக் கிடந்தது பேருந்து நிலைய பிளாட்பாரம். வெயில் மண்டையை பிளந்தது. அருகே காலியாக பெயிண்ட் உதிர்ந்து போய் கிடந்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தேன்.
முன்னங்கால்களையும் பின்னங்கால்களையும் நான்கு பக்கமும் பரப்பிக் கொண்டு காற்றடிக்கும் திசை நோக்கி முகத்தை திருப்பிக் கொண்டே நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு படுத்திருந்தது நாய் ஒன்று. துண்டை சுருட்டி தலைக்கு அண்டக் கொடுத்து எச்சிலும் வியர்வையும் வலிய தூங்கி கொண்டிருந்தார் சப்போட்டா பழ வியாபாரி. தனிமை….எனக்குள் ஏதேதோ நினைவுப் பந்துகளை உருட்டிக் கொண்டே வந்தது. இப்போது காலியாய் கிடக்கும் இந்த பிளாட்பாரம் எத்தனை ஜன நெருக்கடியை சந்தித்திருக்கும்…..
எத்தனை அழுகைகளை வழியனுப்பி வைத்திருக்கும்…..எத்தனை ஏமாற்றங்களை பார்த்திருக்கும்….எத்தனை காதல்கள் இந்த பிளாட்பாரத்தில் பிரிந்திருக்கும்…. எத்தனை உறவுகளை் இங்கு நெகிழ்ந்திருக்கும்…பேருந்து, ரயில் நிலையத்தில் இருக்கும் தூண்கள் எல்லாம் வெறும் தூண்கள் அல்ல… அவை பல வகையான உணர்ச்சிக் குவியல்களின் மவுன சாட்சிகள். இப்போது திடீரென்று ஏனோ என் தம்பி ஆனந்தின் நினைவு வந்தது.
சுமார் பதினைந்து வருடங்கள் இருக்கும். தம்பி ஆனந்த் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது வீட்டில் இருந்து 20 ரூபாய் திருடிவிட்டான். அப்பாவிற்கு தெரிந்து வீட்டில் ஏக களேபரம். ஆனந்தின் தலைமுடியை கொத்தாக பிடித்துக்கொண்டு அவன் கன்னத்தில் ஓர் அரை விட்டார் அப்பா. இரண்டாவது முதுகில் ஒரு சாத்து. மூன்றாவதாக அவர் அடிக்க கையை ஓங்கியபோது, திடீரென ஆனந்த் உயர்த்திய அப்பாவின் கையை இறுக்கிப் பிடித்துவிட்டான். அதோடு அவரை நோக்கி கையையும் உயர்த்திவிட்டான். அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றுவிட்டார் அப்பா. இப்போது மகனின் திருடிய தவறு மறந்து போய் தன்னை அடிக்க துணிந்துட்டானே தன் மகன் என்ற கோபம் உச்சிக்கு ஏறியது.
எதுவும் பேசாமல் கையை இறக்கிவிட்டு போய் விட்டார். அப்போது இருந்து ஆனந்திடம் பேசுவதை நிறுத்திக் கொண்டார் அப்பா. தன் தவறை நினைத்து வருந்திய ஆனந்த் எத்தனையோ முறை அப்பாவிடம் பேச முயன்றான். என்னென்னவோ செய்து பார்த்தான். அப்பா பேசவேயில்லை. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் ஆனந்திற்கு நாமக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் இடம் கிடைத்தது. அவன் கிளம்ப வேண்டிய நாளும் வந்தது. காலையில் இருந்தே அப்பாவிடம் பேச ஆனந்த் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை. பை தயார்… நான் ஆட்டோ கூட்டி வந்தேன். பையை தூக்கி கொண்டு ஆனந்த் கூடத்தில் நின்றான்… ஏக்கமாக…அப்பா வரவேயில்லை. வெளி கிரில் கேட்டை வேண்டுமென்றே சத்தமாக சாத்திவிட்டு வீட்டிற்குள் பார்த்தான்.. ம்ஹூம்… பலனில்லை.
ஆனந்தை சமாதானப்படுத்தி பஸ்ஸ்டாண்டிற்கு அழைத்து வந்தேன். தயாராக இருந்த பேருந்தில் ஆனந்த் ஏறினான். அவன் முகம் ஏகத்துக்கும் வாடிப்போய் கிடந்தது. அவனுக்காக தண்ணீர் பாட்டிலும் பிஸ்கெட் பாக்கெட்டும் வாங்கி கொண்டு திரும்பிய நான் எதேச்சையாக இலவச கழிப்பறையின் கட்டைச் சுவற்றிற்கு அருகில் பார்த்தேன். அங்கே அப்பாவின் முகம் தெரிந்தது. அங்கிருந்து ஜன்னலோரம் அமர்ந்திருந்த ஆன்ந்தையே அப்பா பார்த்துக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் அப்படி ஒரு ஏக்கம். அப்படி ஒரு கழிவிறக்கம்…வியர்த்துப் போய் லேசாக கண் கலங்கியபடி ஆனந்தையே பார்த்துக்கொண்டிருந்தார், அப்பா. அப்பாவின் கவனத்தை சிதைக்க விரும்பாமல் பேருந்திற்குள் ஏறாமல் கீழே இருந்தபடி ஆனந்திடம் தண்ணீர் பாட்டிலை கொடுத்துவிட்டு ஓரமாய் நின்று கொண்டேன். பஸ் புறப்பட்டு செல்லும் வரை கட்டைச் சுவற்றிற்கு பின்னால் அப்பாவின் முகம் தெரிந்து கொண்டே இருந்தது.
எவ்வளவு பெரிய கோபத்தையும், வைராக்கியத்தையும் சுக்கு நூறாக உடைத்துப்போடும் வலிமை பிரிவுக்கு இருக்கிறதோ?…இரண்டு வருடங்களாய் ஆனந்திடம் பேச இறங்கி வராத அப்பாவை பஸ் ஸ்டாண்ட் வரை கூட்டி வந்தது எது? உறவு ஆனந்தம் என்றால் பிரிவு அந்த உறவை இன்னும் ஆழமாக்குகிறது. இது போன்ற எத்தனை பிரிவுகளை இந்த பேருந்து நிலைய பிளாட்பாரம் பார்த்திருக்கும்? எத்தனை நம்பிக்கைகளை இந்த பிளாட்பராம் வழியனுப்பி வைத்திருக்கும்?..எத்தனை சோகமான கண்கள் சிந்திய கண்ணீர் துளிகளை தாங்கியிருக்கும்?…எங்கேயோ போய் ஏமாந்து பொருட்களை இழந்து இங்கு வந்திறங்கிய எத்தனை பேரின் பயந்த முகத்தை பார்த்திருக்கும் இந்த பேருந்து நிலையம்…துரோகம், அழுகை, குழப்பம் என ஆயிரமாயிரம் முகங்கள் இந்த பிளாட்பாரம் வழியாக கடந்து போயிருக்கும். .. அதனால் தான் சொன்னேன்… பேருந்து நிலைய மற்றும் ரயில் நிலையங்கள் உணர்ச்சிக் குவியலகளின் மவுன சாட்சிகள்….இதே போல் தான் செல்வி அக்கா….
செல்வி அக்காவின் கணவர் சேகர் மாமா. அவர்களுக்கு திருமணம் முடிந்து இருபது நாட்கள் இருக்கும். அப்போது மாமாவிற்கு தந்தி ஒன்று வந்திருந்தது. அவர் ராணுவத்தில் பணி புரிகிறார், அவசர சூழல் என்றும், உடனே பணியில் சேரவும் என்று தந்தி செய்தி சொன்னது. உடனடியாக கிளம்பிச் சென்றுவிட்டார், சேகர் மாமா. இருவரும் ஒன்றாய் இருந்து சந்தோசத்தின் அடையாளமாய் அக்கா கர்ப்பமானாள். தகவல் தெரிந்தம் மாமாவால் வரமுடியவில்லை. ஏழாம் மாதம்.. செல்வி அக்காவிற்கு சீமந்தம் நடந்த போது கூட சேகர் மாமா வரவில்லை. அக்காவின் முகத்தில் எப்போதும் ஒரு சோகம் குடிகொண்டிருக்கும். ஒன்பதாம் மாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது… ஒரு நாள் செல்வி அக்காவின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்… மாமா அடுத்த வாரம் ஊருக்கு வருவதாய் தகவல் வந்திருந்தது. அந்த நாளும் வந்தது. காலையிலேயே சித்தப்பா என்னையும் ரயில் நிலையத்திற்கு வருமாறு அழைத்திருந்தார். நாங்கள் கிளம்பும் போது அக்கா நானும் வருகிறேன் என்றது.. நிறைமாத கர்ப்பிணி .. சித்தப்பா சிறிது நேரம் யோசித்து விட்டு சரி வா என்றார்.. யாருமே இல்லாத நீண்ட ரயில் நிலைய பிளாட்பாரம்…அதீத மவுனத்தில் உறைந்து போய் கிடந்தது. செல்வி அக்கா அங்கிருந்த சிமென்ட் பெஞச் ஒன்றில் உட்கார்ந்திருந்தது. சற்று நேரத்தில் தூரத்தில் ரயில் எஞசினின் முகம் தெரியத் தொடங்கியது. அக்காவின் முகத்தில் அப்படி ஒரு பரபரப்பு… ரயில் நெருங்கி பெருமூச்சு விட்டபடி நின்றது. இரண்டு பெட்டிகள் தள்ளி சேகர் மாமா இறங்கினார். நானும் சித்தப்பாவும் ஓடிச்சொன்று பெட்டிகளை வாங்கினோம்… அப்போது திடீரென்று தான் அங்கே அக்கா நிற்பதை மாமா பார்த்தார்.. எங்களையும் பெட்டிகளையும் மறந்துவிட்டு ஓட்டமும் நடையுமாக அக்காவிடம் சென்றார். நெருங்கியதும் மாமாவின் இடது கை விரல்களை தனது வலது கை விரல்களால் சேர்த்து, கோர்த்துப் பிடித்துக்கொண்டது செல்வி அக்கா..எப்படி இருக்கீங்க? என்ற பரிவு… இத்தனை நாளாய் உங்களை பார்க்காம நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா என்ற அங்கலாய்ப்பு…இனிமே என்னை விட்டுவிட்டு போகக் கூடாது என்ற பரிதவிப்பு…அப்பாடி வந்துட்டீங்களே என்ற பேரானந்தம்… என அத்தனை உணர்ச்சிகளும் கலந்திருந்தது அந்தக் கைப்பிடியில்.
கண்கள் கலங்க இரண்டு பேரும் கை கோர்த்தபடி நடந்து சென்று கொண்டிருந்தனர். பெரும் இரைச்சலுடன் வந்து சென்ற ரயிலும், அதில் இருந்து இறங்கிய பயணிகளும், சாய், டீ சத்தங்களும் எனக்கு கேட்கவேயில்லை. ஆனால் அங்கே பெருங்காதல் என்னும் பேரருவி வானத்தில் இருந்து இறங்கி வழிந்தோடும் பேரிரைச்சல் எனக்கு கேட்டது. கொஞ்ச நேரத்தில் மாசக்கைடைசி மணி பர்ஸ் போல் காலியானது பிளாட்பாரம். வெயில் காய்ந்து கிடந்தன தண்டவாளங்கள்.. அடுத்த ரயிலின் வருகைக்காக தயாராகின ஒலி பெருக்கிகள்.
இப்படி எத்தனை உணர்ச்சிகள் இந்த பிளாட்பாரத்தில் பிரசவமாகியிருக்கும்?…எத்தனை நம்பிக்கைகள் இங்கு செத்துப்போயிருக்கும்?…எத்தனை காதல்கள் இங்கு கருகிப்போயிருக்கும்?…அல்லது புதிதாய் மலர்ந்திருக்கும்?…எத்தனை கனவுகள் இந்த பிளாட்பாரத்தை கடந்து போயிருக்கும்?….மரணம், ஜனனம் என எத்தனை உயிர் நிலைகள் இங்கு பிரசன்னமாகியிருக்கும்?… ஆனால் அத்தனையையும் மவுனமாய் பார்த்துக்கொண்டிருக்கின்ற இந்த பிளாட்பாரங்களும், தண்டவாளங்களும். அதனால் தான் பேருந்து நிலையங்களும், ரயில் நிலையங்களும் உணர்ச்சிக் குவியல்களின் மவுன சாட்சிகள் என்றேன்.
வெகு நேரம் ஆகியிருந்தது. நினைவுக் கட்டிலில் நான் தூங்கிப்போயிருந்தேன். ஏற்கனவே திண்டுக்கல் போகும் ஒரு பேருந்து வந்து போயிருந்தது. இதோ இப்போது அடுத்த பேருந்து தயாராக நின்ற கொண்டிருக்கிறது. இந்தப் புருந்தில் ஏறினால் தான் சரியான நேரத்திற்கு திண்டுக்கல் போய் சென்னை ரயிலைப் பிடிக்க முடியும். நெட்டி முறித்து எழுந்து பேருந்தில் ஏறி சன்னலோர இருக்கையில் அமர்ந்தேன். திடீரென என் மனைவியின் ஞாபகம் வந்தது… சென்னையில் வேலை பார்க்கும் நான் வாரம் ஒருமுறை ஊருக்கு வருவேன். நேற்று ஊருக்கு வந்தேன். இன்று காலை எனக்கும் என் மனைவிக்கும் இடையே சின்ன தகராறு..அதனால் காலையில் இருந்தே நானும் அவளும் பேசிக்கொள்ளவில்லை. இதோ இப்போது ஊருக்கு கிளம்பும் போது கூட போயிட்டு வரேண்டா என்று நானும் சொல்லவில்லை… பத்திரம் ட்ரெயின் ஏறிட்டு போன் பண்ணுங்க என்று அவளும் சொல்லவில்லை. மனம் லேசாக கணத்தது.
தினமும் எத்தனை எத்தனையோ பிரிவுகளைப் பார்க்கிறோம்.. ஆனாலும் நமக்கு பிரியமானவர்களுடன் சண்டை போடுகிறோம்..ஈகோ என்னும் இரும்புச் சங்கிலி கொண்டு அன்பு என்னும் குஞ்சுப் புறாக்களின் கால்களை கட்டிப்போட்டு ரணப்படுத்துகிறோம். கடந்து போக முடிகிற தவறுகளைக் கூட கட்டிப் பிடித்துக்கொண்டு கோபம் காட்டுகிறோம். நமக்கு பிரியமானவர்களுடன் சண்டை போடும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த பிரிவு என்னும் பரிதவிப்பை கொஞ்சம் நினைத்துப் பார்ப்போம்… அது தரும் வலியை கொஞ்சம் அனுபவிப்போம். மன்னிக்கும் மனது முன்வந்து நிற்கும். இனி சின்ன சின்ன காரணத்திற்கெல்லாம் அவளுடன் சண்டை போடக் கூடாது என என் உள் மனது சொன்னது. லேசாய் கண்கள் கலங்கின. இப்போது என் உடல் மட்டும் தான் பேருந்தில் சென்று கொண்டிருக்கிறது. என் மனம் வியர்க்க விறுவிறுக்க வீடு நோக்கி சென்று கொண்டிருந்தது… என் மனைவியிடம் மன்னிப்பு கேட்க… அது போல் தான் அவளின் நினைவும் பஸ் ஸ்டாண்டை நோக்கி பரிதவிப்பாய் வந்து கொண்டிருக்கும் என்னை வழியனுப்ப…. ஏனென்றால் கரைக்கவே முடியாத …மறைக்கவே முடியாத… தீராச்சுமைதானே அன்பு….குளிர்ந்த காற்று என் முகத்தில் அறைய மனம் லேசாகி எனக்கு இப்போது தூக்கம் வந்தது
-சுரா
இதையும் படியுங்கள் : அன்பென்று கொட்டு முரசே…