டிஸ்கிளைமர்
நடந்தது நடந்தபடி அப்படியே எழுத முயல்கிறேன். இதில் வரும் என் எண்ண ஓட்டமும் உண்மையிலேயே எனக்கு அப்போது தோன்றியது தான். ஆரம்பம், முடிவு என எந்த வரைமுறையும் இருக்காது. மன்னிக்கவும்.
இதுவும் ஒருவித புதுமையான முயற்சிதான் எனக் கொள்(ல்)க.
பின்வரும் காலங்களுக்கு இது ஒரு தகவல் பொக்கிசமாகவும் இருக்கலாம் என்ற ஆணவத்திலும்…
………….
நாள்: 05. ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 2020.
கொரானா ஊரடங்கு 12 வது நாள்.
முகமூடி போட்ட பால்காரர் பால் ஊத்திட்டு, “ஹவுஸ் அரஸ்ட் எப்படி இருக்கு?” என்றார். “பழகிக்க வேண்டியது தான்” என்றேன். எல்லோரும் வீட்டுல சும்மா இருக்கும் போது எனக்கு மட்டும் காலை ஆறு மணிக்கே வேலை வந்துருச்சு. முகநூல் போஸ்டர் செய்யனுமுனு கன்டெண்ட் வந்திருந்துச்சு.
அவர் அனுப்பிய பதிவு: ‘தேனியில் கொரானா மருத்துவ உபகரணம் தீர்ந்து விட்டதால் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு ஒரு கடிதம்’ படிக்கும் போதே இந்த அரசு மீது விரக்தியும் இயலாமையும் தொற்றிக் கொண்டது.
அம்மா: “பரண்ல இருந்து அந்த வெளக்க எடுத்துக் குடு நைட்டு ஏத்தனும்…” காலையிலேயே கத்த ஆரம்பிச்சுடாங்க. இத கேட்டவுடனேயே, எனக்கு இருமல் வந்துருச்சு…
“மருந்தக் குடினு எத்தன தடவ சொல்லுறது? கொழந்தைக இருக்க எடம். அதுகளுக்கும் ஒட்டிக்கப்போகுது.”
“ரெண்டு மூலையிலயும் வெளக்கு ஏத்துங்க. சரியாகிடும்.” கோவத்த அடக்கமுடியல எனக்கு.
ஆயிரம் நல்ல விசயங்கள் யாரையும் தொற்றிக் கொள்வதில்லை. கொரானாவும் மூட நம்பிக்கையும் வேகமா ஒட்டிக்கொள்கிறது.
மதுரை அரசு மருத்துவமனையில் பணியில் இருக்கும் நண்பர் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்தது. “நாங்களா சேந்து N95 மாஸ்க் கொஞ்சம் அரேன்ஜ் பண்ணிருக்கோம். கோவில்பட்டியில் இருந்து வருது. ஹை வேயில் பைக்கில் வந்துடுவாராம். திருமங்கலம் தாண்டுவது கஷ்டமாம். நீங்க திருநகர் தானே.. போய் வாங்கிட்டு வர்றீகளா?” என்றார். “சரி” என கிளம்பினேன். பன்னிரெண்டு நாட்களுக்கு பிறகு வீட்டை விட்டு.
கார் கொஞ்சம் ஸ்டார்ட்டிங் பிரச்சினை இருந்தது. பல நாள் சும்மாவே இருந்தா அதன் பேட்டரி போயிருமாம்.
ஆனால் சில முயற்சிகளில் ஸ்டார்ட் ஆனது. அம்மா வந்து, “அப்பிடியே ரேசன் கடையில ஆயர்ரூவா குடுக்குறாங்களாம். வாங்கி வார்றியா?” என்றார்கள். பல்ல கடிச்சுக்கிட்டே, “சரி முடிஞ்சா பாக்குறேனு” சொல்லிட்டு மாஸ்க்கை மாட்டிக்கிட்டு வண்டிய திருப்பி மெயின் ரோடு ஏறினேன். போன் அடித்தது.
“அல்லோ… சார் நான் ஸ்ரீராம், திருமங்கலம் வந்துட்டேன்.”
“இப்பதான் கிளம்புறேன் சார். இன்னும் பத்து நிமிசம் ஆகும். சாரி.”
“பரவால சார் பஸ்ஸாண்டு பக்கத்திலேயே நிற்கிறேன். பொறுமையா வாங்க.”
நைட் கொஞ்சம் மழை. ரோட்டில் ஆங்காங்கே தண்ணீர் தேக்கி இருக்க, ஆங்காங்கே நாலஞ்சு பைக்கும் ஒன்னு ரெண்டு காரும் ஓடிக்கிட்டு இருந்தது. பலசரக்கு கடைகளை தவிர வேறு எல்லாம் மூடிக்கிடந்தது. அப்போது தான் அதைப் பார்த்தேன். சாலை ஓர மரங்கள், பச்சைப்பசேல் என இரவின் மழை அதன் மீது பூசப்பட்ட அழுக்குகளை கழுவி விட்டிருந்தது. நம்ம ஊரும் அழகாத்தான் இருக்குது. நீல வானம்… ஆங்காங்கே அமைதியாய் கடக்கும் மேகங்கள்… பூத்துக் குலுங்கும் பச்சை மரங்கள்… கழுவி விட்ட கருஞ்சாலைகள்… இத்தனை நாட்களாக இதைத்தான் இத்தனை நாட்களாக அழுக்காக்கி வைத்திருக்கோம் நாம்.
திருமங்கலம் நுழையும் போது காவலர்கள் சில வண்டிகளை நிறுத்தி “எங்கே போறீங்க?” என்றார். “பஸ் ஸ்டாண்ட்” என்றேன். “போ” என கை அசைத்தார்கள். ஒருவித அழுத்தம் மாஸ்க் மறைத்திருந்த முகத்திற்குள் இருந்தது. தன்னைத்தானே பாதுகாத்துக் கொண்டு இந்த மக்களின் பாதுகாப்புக்காக போராடிக்கொண்டும், பாவம் தான் இவர்களும்.
பஸ் ஸ்டாண்டு வந்து ஸ்ரீராமை அழைத்தேன். பைக்கிலேயே (ஆக்டிவா) கோவில்பட்டியில் இருந்து 80 கி.மீ இருக்கும். அதுவும் அந்த N95 மாஸ்க்கை இருக்கைக்கு கீழ் இருக்கும் பாக்சில் வைத்துக்கொண்டு வெளியில் சில ஆப்ரேசன் சேப்டி கிட்டை வைத்துக்கொண்டு தனியாக வந்திருந்தார். அவருக்கு தரவேண்டிய பணம் எனக்கு இன்னும் வரவில்லை. ஆன் லைனில் ஏதோ பிரச்சனை என சொன்னார்கள். “இந்த யூபிஐ ஒழுங்காவே வேல செய்யல” என்றார் என் அழைப்பை ஏற்று. பிறகு ஸ்ரீராமின் அக்கௌண்ட் டீடைல் எல்லாம் வாங்கி கொடுத்துவிட்டு காத்திருந்தேன்.
அந்த பஸ் ஸ்டாண்டு தான் தற்காலிக காய்கறி மார்க்கெட் போல. ஒவ்வொருவராய் தள்ளி தள்ளி நிற்க வைத்து அனுப்பினார்கள் காவலாளிகள். மனைவியை வரிசையில் அனுப்பிவிட்டு ஒருவர் துண்டால் முகத்தை மூடிக்கொண்டு நின்றார். என்னை பார்த்து (நானும் ஸ்ரீராமும் பேசுவதை கேட்டு மருத்துவர் என நினைத்துக்கொண்டார் போல) “இந்த கொரானாவ ஒழிக்கவே முடியாதா?” என்றார்.
“எதையும் நம்மால மாத்த முடியாது. இப்போதாவது கவனமா இருக்கனும்” என சிலேடையில் பதில் சொன்னேன். அவருக்கு என்ன புரிஞ்சதோ தெரியல. ஆனால் ஸ்ரீராம் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். நானும் சிரிக்க எனக்கு திரும்பவும் இருமல் வந்துருச்சு.
ஸ்ரீராமின் சிரிப்பு நின்று அவர் கண்களில் பயம் தெரிந்தது. “கழுத்தை இறுக்கி மாஸ்க் கட்டிக்கிட்டா இப்படி இருமல் வரத்தானே செய்யும்” என்றேன். சற்று சாந்தமானது அவர் மனது. நன்றி தெரிவித்து விட்டு அவர் ஆக்டிவாவில் பறக்க, நான் காரை ஆன் செய்தால் பேட்டரி மொத்தமா போச்சு போல ஸ்டார்ட் ஆகவில்லை. மார்கெட்டில் நின்ற இருவரிடம் பிரச்சனையை சொல்ல சிரித்துக்கொண்டே வந்து வண்டியை தள்ளிவிட ஒரே அழுத்தில் ஸ்டார்ட் ஆனது. அவர்களுக்கு நன்றி தெரிவிக்க திரும்பி பார்த்தேன்… அவர்கள் அதை கண்டுக்காமல் சென்றுவிட்டார்கள் கைகளை உதறிய படி.
வண்டியை திருப்பி நூறு மீட்டர் கூட தாண்டவில்லை சாலையை மறைத்து நின்றார்கள் காவலர்கள். அதில் ஒருவர் என்னை நிறுத்தினார். கண்ணாடியை இறக்கி “மருந்து வாங்கிட்டு போறேன் சார்,” என்றேன்..
“எங்கே போறீங்க”
“மதுரைதான்”
மதுரையில் கிடைக்காத மருந்தா இங்க கெடைக்குது? நீங்கள்லாம் திருந்தவே மாட்டிங்களா? கிளம்பி வந்துடுங்க.. எதாவது காரணத்த சொல்லிக்கிட்டு” தலையில் அடித்துக்கொண்டே போக சொல்லி கை காட்டுனார். எனக்கு அரசாங்கம் மேல தான் கோவம் வந்துச்சு.
டாக்டர்களுக்கு வேண்டியது ஒழுங்கா கிடைத்தால், அவர்கள் ஏன் தனியாக இப்படி தேடி வாங்கனும்? நான் ஏன் இப்படி வண்டிய எடுத்துக்கிட்டு வரனும்? இந்த போலீஸ்காரனிடம் திட்டு வாங்கனும்?
ஊரை தாண்டி ஹைவே ஏறினேன். தனிமையில் இந்த சாலை பயணத்தையும் இன்று புதுசா தெரிகிற மரங்களையும் ரசித்தபடி திருநகரை தாண்டினேன். சாலை மறைக்கப்பட்டு இருந்தது. என்னை ஓரமாய் நிறுத்த சொன்னார். வண்டிய ஆஃப் செய்தால் திரும்பவும் பேட்டரி பிரச்சனை வருமுனு ஆன் லேயே வைத்திருந்தேன். அங்கே பைக்கில் தம்பதிகள் வந்திருந்தார்கள் அவர்களிடம் அந்தக் காவலாளி “ரெண்டு பேரா இப்படி ஏன் வெளிய வர்றீங்க? உங்களால தான் இந்த கிருமி பரவுது சொன்னா புரியாதா?” என கண்டிப்போடு சற்று பொறுமையாக சொல்லிக்கிட்டு இருந்தார். அந்த ஆள் ரகசியம் சொல்வது போல அந்த போலீஸ் பக்கத்தில் செல்ல.. “அங்கேயே நில்லு… பக்கத்துல வராத” கத்துனாரு… இந்த வாக்குவாதம் முடிய நேரமாகும் போலனு நான் வண்டிய கிளப்பிட்டேன் அங்கிருந்து.
திருப்பரங்குன்றம் பாலமெல்லாம் அடைத்து சீல் வைத்திருந்தார்கள். சுற்றி செல்லவேண்டி இருந்தது. அருகில் இருந்த பெட்ரோல் பங்க் கூட அடைக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு கிமீக்கு நான்கு போலீஸ் நின்றார்கள்… சில பைக் ஓட்டிகளை நிறுத்தி விசாரித்துக்கொண்டு இருந்தார்கள்.
எல்லீஸ் நகர் வழியே பாலம் ஏறி பெரியார் பஸ் நிலையம் வந்தேன். எப்போதும் ஒரு பத்து நிமிடமாவது நிற்க வேண்டி வரும் இந்த இடத்தில் அவ்வளவு டிராபிக் இருக்கும். ஆனால் இரு துப்புரவு பணியாளர்கள் மட்டும் கூட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். மொத்த வண்டிகளையும் கூட்டி தள்ளிவிட்டார்கள் போல. இன்று யாரையும் காணோம். சுத்தமாக இருந்தது.
பூக்கடைகளில் மாலைகள் தொங்கிக்கொண்டு இருந்தது. ஏதோ இன்னும் திருமணங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது போல நாலைந்து பேர்கள் மட்டும் கொண்டு.
ஆடம்பரம் தேவையில்லாத ஒன்று என்பதை இப்போதாவது புரிந்துகொண்டால் நல்லது.
இறப்பும் அமைதியாய் தான் அடக்கம் செய்யப்படுகிறது. ஆர்ப்பாட்டம் இல்லாமல், மந்திரம் சொல்லக்கூட யாரும் வருவதில்லை.
கொரானா இந்த மூட நம்பிக்கையையும் கொன்றுவிட்டால் நல்லது.
சிம்மக்கல் வந்தேன், அந்த போலீஸ் ஸ்டேசன் அருகே நிறுத்தப்பட்டேன். ஒரு காவலாளி ஒருவர் டிக்கியை திறந்து காட்ட சொன்னார். வண்டியை ஆஃப் செய்யாமல் கிழே இறங்கி “மெடிக்கல் கிட் எடுத்துக்கொண்டு செல்கிறேன்” என்றேன்..
“எதாவது ரிக்காட் இருக்கா”
“இல்லை, போன் செய்து தருகிறேன் பேசுங்க”
“உங்க ஐடி காட்டுங்க” என்றார்… நானும் என் டிரைவிங் லைசென்சை காட்டினேன்.
“ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு தான் போறீங்கனு எப்படி நம்புறது? கிடைக்காத பொருள் இது. கடத்துறீங்கனு தான் யோசிக்கத் தோணுது?”
எந்த டாக்குமெண்டும் இல்லை. பணம் கூட ஆன் லைன்ல தான் மாற்ற முடிந்தது. அதுவும் நான் செய்யவில்லை, அனுப்பிய ஆதாரம் கூட என்னிடம் இல்லை. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது உடம்பு வியர்த்துக் கொட்டியது.
“என்னிடம் எந்த ஆதாரமும் இல்லைதான். ஹாஸ்பிடல் டீன்கிட்ட பேசுங்க. இல்லைனா எம்.பி.,கிட்ட பேசுங்க. அவர்கள் உண்மைய சொல்வாங்க..” என்றேன்.
சிரித்துக்கொண்டே, “பயப்பிடாதீக… இந்த மாஸ்க்லாம் எங்க கெடைக்குதுனு சொல்லுங்க? பிளாக்ல இருந்தா கூட ஓகே தான். நாம தான நம்மள பாத்துக்கனும். பாத்துப் போங்க. கிளம்புங்க” என்றார்.
மாஸ்க்கை இறுக்கி கட்டிக்கொண்டு கதவை அடைத்து கிளம்பினேன். ஆள் ஆராவாரமற்ற அந்த சுத்தமான சாலை கண்கள் கலங்கியதால் தெளிவாக தெரியவில்லை. பாவம் இந்த உழைக்கும் மக்கள்.
– அருள்குமரன்
காதலை சுவாசியுங்கள் : காதல் தோல்வி!