– திருமதி. சாந்தி சரவணன்
ஆலமரத்தின் கிளைகள் விரிந்து இருப்பது போல்… பெருமை வாய்ந்த திருவல்லிக்கேணி பல சிறு, சிறு சந்துகளையும், வீதிகளையும் சில கிலோ மீட்டர்கள் கடந்தால், அண்ணாசாலை நெடுஞ்சாலையும் இணைக்கும் பாலமாக இருக்கிறது. நாம் அனைவரும் ஓரே இனம், மனித இனம் என்ற சொல்லை மெய்ப்பிக்கும் வண்ணம் இந்து, முஸ்லிம், கிருத்துவர்கள் என அனைவரும் வாழும் இடமாக இருக்கிறது, திருவல்லிக்கேணி.
ஒரு பக்கம் பார்த்தசாரதி கோயில், ஒரு பக்கம் மஸூதி, ஒரு பக்கம் சர்ச் என அனைத்து இனத்தவரும் இணைந்து வாழும் நகரத்தின் ஒரு சிறந்த பகுதி திருவல்லிக்கேணி என்று சொன்னால், அது மிகையாகாது. மற்றொரு சிறப்பு எந்தச் சந்து வழியாக போனாலும், மெரினாவை எளிதில் அடைந்து விடலாம். இரவில் கடற்கரையில் அலைகளும் மணல்களும் உரசி கொள்ளும் சத்தத்தில், அவர்களின் பாஷை அறியாமல் நிலவின் ஒளியில் மணலில் பெட்ஷிட்டை விரித்துப்போட்டு, அன்னாந்து வானத்தை பார்த்து ரசிப்பது ஒரு அலாதி சுகம் தான்.
இந்தப் பெருமை வாய்ந்த இடத்தில் அதில் அங்கமாக இருப்பது, குடிசைகளை தன்னகத்தே கொண்டுள்ள குப்பங்கள். ஓவ்வொரு பாலங்கள் ஓட்டி பல மக்கள் அந்த கடற்கரையை சார்ந்து வாழ்க்கையை அமைத்துக்கொண்டு உள்ளனர். என் ரோட்டுக் கடைகள் மாலை 6 மணிக்கு ஆரம்பித்தால் இரவு 12 மணிக்கு, காவலாளி வந்து கிளம்புங்க என சொல்லித் துரத்தும் வரை கடற்கரை முதலாளிகளுக்கு கிளம்பி பழக்கமில்லை.
லக்ஷ்மி தள்ளுவண்டி என்றால் மிகவும் பாப்புலர். லக்ஷ்மி கடைக்கு என தனி வாடிக்கையாளர்கள் இருந்தனர். கையேந்தி பிச்சை எடுப்பவர் முதல், கைபேசி தொழில் அதிபர்கள் முதல் காரில் வந்து அமர்ந்து குடும்பத்தோடு சாப்பிட்டு செல்பவர்கள் பலர். திரை நட்சத்திரங்கள், சில சமயம் பெரும் அரசியல் புள்ளிகள் கூட. அதிலும் ஸ்பெஷல் அயிட்டம் முட்டை தோசை, தலகரி, கல் தோசை இறால், வறுத்தக் கறி, பரோட்டா சால்னா, ஆப்பம் பாயா….
பக்கத்து வீட்டு மாரியை தான், உதவிக்கு வைத்து இருந்தாள். ஒரு நாளைக்கு 100 ரூபாய் கூடவே இரவு சாப்பாடு. பெரும்பாலான நேரங்களில் வீட்டுக்குப் போகும்போது காலி பாத்திரங்களும், சுருக்குப் பை நிரம்பி போவது தான் வழக்கம்.
அன்றும் அதேபோல் வியாபாரம் முடித்து பாத்திரம் எல்லாம் கழுவி எடுத்துக்கொண்டு, விவேகானந்தர் இல்லம் வழியாக குடிசையை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தார்கள்.
மாரி அக்கா அங்கே பாரேன், “கமலி மாதிரி இருக்குது” என்றான்.
ரோட் டிரான்ஸ்பார்மர் வெளிச்சத்தில், பாவடை தூக்கி ஒரு பெண் ஆடிக்கொண்டு இருந்தாள்.
அய்யோ, அது கமலி தான்டா, என வண்டியை விட்டுவிட்டு… வேகமாக எதிரே பேருந்து வருவதையும் அறியாமல், தலை தெறிக்க ஓடினாள்.
பாவி மகளே… எப்படி டீ சங்கலியை கழிட்டிட்டு வந்தே என முதுகிலே இரண்டு அடி போட்டாள். எந்தப் பய கழட்டி விட்டானோ. என்னடா உங்களுக்கு எல்லாம் குழந்தைகள் இல்லையா. ஏன்டா இப்படி அலையறிங்க என கத்திக் கொண்டே, மகளை இழுத்துக்கொண்டு கண்ணீரோடு குடிசையை அடைந்தாள்.
ஏன்டீ இப்படி பன்ற!…
உங்க அப்பன், வயத்துல உன்னை கொடுத்துட்டு நம்மை அநாதையாக தவிக்க விட்டுட்டு போய்ட்டான் அந்த பாவி. உன்னை வளர்க்க நான் எம்புட்டு கஷ்டப்படறேன். உனக்கு எதுவும் புரியவில்லையா. நான் என்னத்த செய்ய என புலம்பிக்கொண்டு இருந்தாள்.
அம்மா ஏதோ கத்தரா, அதுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத மாதிரி, சட்டைப் பட்டனை கழட்டிவிட்டுக் கொண்டு இருந்தாள் கமலி.
பாவி, பாவி… பின் பக்கமா போட்ட சட்டையை யாருடி முன்பக்கமாக மாத்தினாங்க. எந்த பைய வந்தானு தெரியலியே, காளியாத்தா நான் என்னப் பண்ணுவேன் என மறுபடியும் முதுகில் இரண்டு போட்டாள். அப்பவும் சிரித்தபடி கமலி விட்டத்தை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
பிறக்கும் போது நல்லாதான் பிறந்தாள். நல்ல புத்திசாலி. அரசு பள்ளியில் இலவசக் கல்வி வகுப்பில் சேர்த்து விட்டாள் லக்ஷ்மி. பள்ளியில் முதல் மதிப்பெண் எடுப்பாள். ஐந்தாம் வகுப்பில் புத்திசாலி பெண் இவள் தான் என டீச்சர் சொல்லும்போது, பூரித்துப் போவாள் லக்ஷ்மி. துரு துருவென கண்கள் அத்தனை அழகு. லக்ஷ்மி நிறம் கருப்பு தான், ஆனால் கமலி அவ அப்பன் மாதிரி.
ஒரு நாள் பள்ளி விட்டு குழந்தை வீடு திரும்பவில்லை. வழக்கமாக 3 மணிக்கு வந்து விடும் கமலி வராததுக் கண்டு பதறி அடித்துக்கொண்டு பள்ளியில் சென்றுப்பார்த்தால் பூட்டு தொங்கியது.
காவலாளி பாப்பா அப்பவே போயிடுச்சுமா என்றான்.
அக்கம் பக்கம் வீட்டு நல்ல உள்ளங்கள் துணையோடு தேடுகையில், குமுதா கணவர் தான், மிசார்பேட்டை மார்கெட்டில் பிளாட்பாரத்தில் கமலி கிடந்தாள் எனத் தூக்கிக்கொண்டு ஓடி வந்தார்.
லக்ஷ்மிக்கு நிலைக் கொள்ளவில்லை. அரசு மருத்துவமனையில் உடனே அழைத்துச் சென்று மருத்துவம் பார்த்தாள்.
என்ன ஆச்சுனு தெரியவில்லையே. என் புள்ள இப்படி பேச்சு முச்சு இல்லாம இருக்காளே என பதட்டத்தோடு மருத்துவர் அறையையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.
சிறிது நேரத்தில் மருத்துவர் வெளியே வந்து, பாப்பா எதையோ கண்டு பயந்து இருக்கா. யாரோ தவறா நடக்க பார்த்துருக்காங்க, ஆனா புள்ள தப்பிடுச்சி. ஆனால் புத்தி பேதலித்துவிட்டது. சில காலங்களில் சரியாகி விடலாம். மருந்து மாத்திரைகள் ஊசி எல்லாம் எழுதிக் கொடுத்து இருக்கிறேன், ஓழுங்கா வந்துப் போட்டு கொள்ளுங்கள் என சொல்லியதை கேட்கும் நிலையில் லக்ஷ்மி இல்லை, மயங்கி சரிந்து இருந்தாள், குமுதாவின் தோளில். குமுதா தான் உடனிருந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டு இருந்தாள்.
மருத்துவர் சென்றவுடன் தண்ணீர் தெளித்து லக்ஷ்மியை எழுப்பினாள்.
உயிரற்ற சடலமாய் லக்ஷ்மி, கமலி அருகே சென்றாள். நர்ஸ் ஊசி போட அம்மா ஊசி போடனும், பாப்பாவின் பாவடை லூஸ் செய் என்றாள்.
லக்ஷ்மி துடித்து விட்டாள். தாயீ என் புள்ளைய கண்ணுக்குள் வைச்சு வளர்த்து இருக்கிறேன். ஊசி வேணாம் தாயீ. மாத்திரை கொடு, நா புள்ளைக்கு கொடுத்துவிடுகிறேன் என்றாள்.
நர்ஸ் என்னம்மா ஒரு சின்ன ஊசிக்கு போய் பயப்பிடுற என சொல்ல, லக்ஷ்மி என் புள்ளை ரோசாப்பூ தாயீ. அது உடம்புல ஊசி, கத்தி படக்கூடாது தாயீ. அது தாங்காது எனச் சொல்ல நர்ஸ் தலையில் அடித்துக்கொண்டு சென்றாள்.
குமுதா என்னடீ இன்னா சொல்ற. ஊசி போடட்டும் டீ என்றாள். இல்லை கா ஊசி வேண்டாம். என் புள்ளைக்கு மாத்திரை மட்டுமே போதும் என மாத்திரை வாங்கிக்கொண்டு வூடு வந்து சேர்ந்தார்கள்.
அன்று முதல் அவளின் மருத்துவச் செலவுகளை சமாளிக்க முடியாமல் தடுமாறினாள் லக்ஷ்மி. ஆனால் மனம் தளராமல் போராடிக்கொண்டு இருந்தாள்.
வருமானத்தில் வரும் இக்கட்டில் கூட சமாளித்து விடுகிறாள். ஆனால் கமலி…. அவள் ஒரு சமயம் போல் இருப்பதில்லை. அவள் வீட்டில் இல்லாத சமயத்தில், குப்பத்து ராஜாக்கள் சேட்டைத் துவங்கிவிடும்.
கட்டி வைத்த சங்கிலியை கழற்றி விட்டு, கமலியை வெளியே அழைத்து வந்து விடுவார்கள்.
கமலி அழகு என்றாள் அவ்வளவு அழகு. இரு கண்கள் மயக்கும் தன்மையுடையது. பெரியவ ஆனா ஸ்ரீதேவி மாறி இருப்பா என்பாள் குமுதா அக்கா அடிக்கடி. ஆமாம் நிஜம் தான். அவள் வாக்கு பலித்தது. மூன்றாம் பிறை ஸ்ரீதேவி ஆகிவிட்டாள் என லக்ஷ்மி சில நேரங்களில் நினைப்பாள்.
கமலி நல்ல புத்திக்கூர்மை. கண்ணாடி என்றால் மிகவும் பிடிக்கும். புரோட்டாவிற்கு வைத்த மைதாமாவு பல சமயங்களில் பவுடராக கமலி முகத்தில். கண்ணாடியை பார்த்துக்கொண்டே இருப்பாள்.
சட்டைப் பட்டனை கழற்றி விட்டுக்கொண்டே இருப்பாள். பின் பக்கம் பட்டன் வைத்த சட்டைப்போட்டு விட்டு, லக்ஷ்மி கடைக்கு போய் வந்து பார்த்தால், சட்டை முன் பக்கத்தில் இருக்கும். பதறி போய் செய்வது அறியாமல் துடிப்பாள் லக்ஷ்மி.
பல நேரங்களில்… குமுதா அக்கா, நீ பேசமா இவளை மனநல காப்பகத்தில் விட்டுவிடு லக்ஷ்மி. நீயும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ. உனக்கும் சின்ன வயசு தானே.
லக்ஷ்மி கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பாள். பலருக்கும் குப்பத்தில் அவள் மேலும் ஒரு கண் தான். ஆண் தானே!
குமுதா அக்கா பேச்சை இந்த விஷயத்தில் மட்டும் லக்ஷ்மி காது கொடுத்து கேட்காமல் கடந்து சென்று விடுவாள். அவளுக்கு கமலிதான் எல்லாமே.
கமலியை பார்த்துக்கொண்டே பழசையெல்லாம் நினைத்துக்கொண்டு இருந்தாள் லக்ஷ்மி. குழந்தை சங்கிலியின் பினைப்பில் அப்படியே முழங்கால் மடித்துக்கொண்டு மண் தரையில், வாயில் ஜொல்லோடு தூக்கத்தில்.
அருகே வந்து கமலியின் தலையை வருடிக்கொண்டே கண்களில் நீரோட்டம். குழந்தைக்கு உடம்பு கொதித்தது. பதறினாள். சங்கிலியின் பூட்டை திறந்து, மகளை பாய் போட்டு படுக்க வைத்தாள். ஒரு மல்லு துணி கிழித்து ஈர தண்ணியில் நனைத்து, தலையில் பத்து போட்டாள். கணவரின் புகைப்படம் பக்கத்தில் இருந்த விபூதி கொஞ்சம் கொண்டு வந்து, மகளுக்கு நெற்றியில் வைத்தாள்.
இரவு தூக்கம் விடைபெற்று போனது. மகளின் அருகே சென்று கட்டிப்பிடித்து கொண்டு படுத்துக்கொண்டு, விட்டத்து ஓட்டையில் தெரியும் இருட்டை பார்த்துக்கொண்டே இருந்தாள் விடியுமா? என்று. எப்போ பொழுது விடிந்தது என்று தெரியவில்லை.
குமுதா அக்கா, ஓலை கதவின் அருகே வந்து லக்ஷ்மி, லக்ஷ்மி என கத்தினாள்..
அலறி அடித்துக்கொண்டு எழுந்தாள் லக்ஷ்மி. வா அக்கா….. பொழுது விடிந்தது தெரியல… கா…
மகாராணிக்கு அலுப்பு ஜாஸ்தியா என்ற குமுதாவின் மடியில் படுத்து அழ ஆரம்பித்தாள் லக்ஷ்மி.
அட சும்மா கேட்டேன். அதுக்குப் போய் அழவுற என்று சொன்னபடி தலையை கோதி விட்டாள் குமுதா.
இல்லக்கா எப்பவும் போல இவள் அந்த டீ கடை அருகே….. அந்த பசங்க எல்லாம் இவளை ரகளை பண்ணிகிட்டு… என்னத்த சொல்ல கா.. ஒரு சமயம் நல்லா இருக்கா.. ஆனா பல சமயங்களில் இப்படி..
அதுக்கு அழுவியா. அந்தப் பொறுக்கி பசங்களை நாலு சாத்து சாத்தியிருக்கனும் நீ, அதை செஞ்சி இருக்கமாட்டே. புள்ளையப் போட்டு அடித்து இருப்ப. உனக்கு வேற என்ன தெரியும். பாவம் புள்ள. சரி அதையே நினைச்சு கவலைப்படாதே லக்ஷ்மி. டாக்டர் சொன்ன மாதிரி எப்ப வேணுமானாலும் அவளுக்குப் பித்தம் தெளியலாம் என்றாள் ஆறுதலாக.
சரி, பல்லை விலக்கு நான் போய் சூடா இட்லி சட்னி எடுத்து வரேன் என சொல்லிப் போனாள், குமுதா.
லக்ஷ்மி மகள் கமலியை பார்த்தாள். என்னப் பாவம் செஞ்ச என் வயித்துல பொறக்க… வேற இடத்தில் பொறந்து இருந்தா உன் எழுத்து மாறியிருக்குமே என மனதில் சொல்லிக்கொண்டே, பல் தேய்த்து குளித்து வர, கதவை கயிறுப் போட்டு கட்டி வைத்துவிட்டு பொது கழிப்பறை சென்றாள்.
குளிக்கும் போது புடவையில் ரத்த கரை.. இப்ப நமக்கு நாள் இல்லையே என யோசித்து, குளித்து முடித்து வேகமாக வீட்டுக்கு ஓடி வந்தாள்.
வாசலில் வைத்து இருந்த வெள்ளை செம்பருத்தி செடியில், பூ பூத்து இருந்தது. இடையே சிவப்பு வண்ணம். உள்ளே பதட்டத்தோடு மகள் அருகே வந்து பார்த்தாள். பாவாடையில் சிவப்பு கறை. கடவுளே என தலையில் கைவைத்து உறைந்த நிலையில் அமர்ந்துவிட்டாள்.
லக்ஷ்மி என்ன இப்படி உக்கார்ந்துருக்க, என கேட்டு கொண்டே நுழைந்த குமுதா… எழுந்திரு, இந்த இட்லி சாப்பிடு என்றவளை லக்ஷ்மியின் கண்ணீர் தடுத்தது.
ஏன்டீ… இப்ப என்னாத்துக்கு இப்படி ஒப்பாரி வைக்கிற என்றவளின் விழி, லக்ஷ்மியின் கைபோன திசையில் போனது. கமலியின் பாவாடை கறையை காட்டியது…
நல்ல விஷயம் தாண்டி… இதுக்குப் போய் ஏன் ஒப்பாரி வைக்கிற… எழுந்திரு… நடக்கிற வேலைப் பார்க்கலாம்.
இல்லை கா…
ஏண்டி.. லக்ஷ்மி
இதை யாராண்டையும் சொல்லாதே என்றாள் விசும்பிக் கொண்டே…
பின்னே.. என்ன செய்ய. நல்ல விஷயத்தை சொல்லாம. காசு எல்லாம் நான் தரேன் எழுந்திரு.
நானு போய் நாலு பேரை கூப்பிட்டு வரேன். அதுக்குள்ள நீ அவளை எழுப்பு. ஐந்து பேரா தண்ணீர் ஊத்திடலாம், எனக் கிளம்பி சென்ற குமுதாவை தடுத்து நிறுத்தினாள் லக்ஷ்மி.
என்னடீ லக்ஷ்மி…
வேண்டா கா…
எதுக்கு வேண்டாங்கிற என்ற குமுதாவை பார்த்து லக்ஷ்மி, “கர்பப்பையை வெட்டி எடுக்க எந்த ஆஸ்பத்திரிக்கு போகனும்” சொல்லுக்கா என்றாள், உயிரற்றக் குரலில் ஜடமாய்…
வாயடைந்த குமுதா, என்னடி என்னா சொல்ற, புள்ளைக்கு ஒரு ஊசி போட கூட விடமாட்ட, ஊரையே கூட்டி கூப்பாடு போடுவே, இப்போ இப்படி சொல்ற. உனக்கு பைத்தியம் புடிச்சிருக்கா என்றவளை வெறித்துப் பார்த்த லக்ஷ்மி, ஒரு நிமிடம் மௌனம் காத்தாள்.
ஏழைக்கு வயிறு மட்டுமே இல்ல கா, கர்பப்பையும் இருக்க கொடுத்து வைக்கல, பட்டினி கிடந்து சாகலாம் கா... பித்துப் பிடிச்ச பொண்ணுன்னு கூட பார்க்காத கேடுகெட்ட சமூகத்தில் வாழறோம்.
என் புள்ளையை நான் காப்பத்தனும். அவ எனக்கு வேணும். அதுக்கு எனக்கு வேற வழி தெரியலை.
நான் ஆஸ்பத்திரிக்கு போறேன். உனக்கு தான் ஆஸ்பத்திரியில் நல்ல பழக்கம் ஆச்சே, எனக்கு உதவி பண்ணுக்கா. முடிந்தால், கூட வாக்கா என சொல்லிக் கொண்டே தூங்கி கொண்டு இருக்கும் மகள் கமலியை செல்லம் செல்லம் எழுந்திருடா, ஆஸ்பிட்டல் போலாம். எழுந்திருடா என எழும்பினாள்
உம் உம்….. நான் வர மாட்டேன் போ.. என்னை நீ அடிச்சயில்லை… உன் பேச்சு கா கா என்று கமலி…..மறுபடியும் விட்டத்தை பார்த்தபடி படுத்துக்கொண்டாள்.
கமலியை எழுப்பியபடி லக்ஷ்மி காசு சேமித்து வைத்த உண்டியை உடைக்கத் தொடங்கினாள்…
குமுதா வாயடைத்து போய் நிற்க…
லக்ஷ்மி கமலி ஆஸ்பிட்டல் செல்ல ஆயத்தமானார்கள்.
வெளியே ஒலிப்பெருக்கிகள், சுதந்திர தின விழா கொண்டாட்டம் பாடல்கள் ஓளித்துக் கொண்டு இருந்தது.
நன்றி.
– கதைப் படிக்கலாம் – 61