– மாதங்கி
“கதவு மூடுற நேரமாச்சு” மனசுல நினைச்சுக்கிட்டே கதவை அடைக்குறதுக்காக எல்லாம் எடுத்து வச்சேன்.
சிறு கிராமம் தான். ஷட்டர்லாம் இல்ல. தேவையும் படல. அகலமான, பலமான தேக்குமரக் கதவு தான்.
வழிவழியா வர சின்ன மளிகைக் கடை. தாத்தா காலத்து மரம்… பலா மர ஊஞ்சல், தேக்கு மரக்கட்டைகள், நாற்காலிகள், கதவுகள்.. அதனால பாதுகாப்புக்கு பயமே இல்ல.
வயிராற சாப்பிட ஒரு நல்ல வருமானம். சொந்தமா ஓட்டு வீடு, சிறிய அளவில் தோட்டம், வயல் எல்லாம்.. போதும்…
தூரத்துல தள்ளாடித் தள்ளாடி ஒரு உருவம் கடைய நோக்கி வரத கவனிச்சாலும், சட்டை செய்யாம கடைய மூடுறதுல கவனமா இருந்தேன்.
பசி, அயர்வு, கோபம், உடல் வலி..
“வீட்டுக்குப் போய் சாப்பிட்டுப் படுக்கணும். சின்னவன உடம்பு அமுக்கிவிட சொல்லணும்”
வேகவேகமா கடைய சாத்துறதுல முனைப்பா இருந்தேன்.
உருவம் அருகாமையில் வந்தது..
80-க்கு மேல இருக்கும்… பிச்சைக்காரத் தோற்றம்… அழுக்குத் துணி… பழுப்பு நிறத்துணி.. சின்ன துர்நாற்றம்… துவைச்சே பல நாளாயிருக்கும்… சரியா குளிக்கல, சாப்பிடவும் இல்ல போல…
“எதாச்சும் பிச்சை கேக்குறதுக்கா இருக்கும்..” சலித்துக்கொண்ட எனக்கு சின்னதொரு அதிர்ச்சி.
“தம்பி, ரெண்டு பலூன் வேணும்பா…”
என் கோபமும், சின்னதொரு வக்கிரமும் முளைத்துக் கொண்டது.
“கடை மூடுற நேரம். எதுவுமில்ல போ…”
“இல்ல தம்பி.. எனக்கு யாருமில்ல. தூரத்துல ஒரு சின்ன தம்பிய பார்த்தேன். ஆசையா பேசும் தாத்தான்னு…
மதியம் அது பள்ளியூட கேட்டுக்கு வெளில வந்து, யாருக்கும் தெரியாம எனக்கும் கொஞ்சம் சாப்பாடு தந்து சாப்பிடும்.. ஆசையா முதல் முறையா பலூன் கேட்டுச்சு என்கிட்ட.. அதுக்கு என்னால எதுவும் செய்ய முடியல. அதுக்காக பிச்சையெடுத்து எட்டு ரூபா சேத்துருக்கேன்.. இதுவரை நான் சாப்பிடாம இருந்தாலும், பிச்சை எடுத்தது இல்ல. ரெண்டு பலூன் மட்டும் தா தம்பீ..”
கோபம் தலைக்கேற,
“உன் கதையெல்லாம் எனக்கு எதுக்குச் சொல்ற.. எதுவும் தரமுடியாது… எடுக்குறது பிச்சை.. இதுல பேச்ச பாரு..”
வலிய விரட்டினேன்..
அவருக்குக் கண்களில் ஈரம். “அதுக்கு நாளைக்கு பொறந்த நாளாம் தம்பீ” மெல்ல தழுதழுத்தார்.
“எதுவும் இல்ல போ.. முதல்ல கெளம்பு”
விரட்டினேன்.. மெல்ல தலை குனிந்தவாறு அவர் புறப்பட்டார். வேதனையில் அவர் முகம் இறுகி, கண்களில் கண்ணீர்.
எதையோ சாதித்தவாறு வீட்டுக்குச் சென்று, சாப்பிட்டு உறங்கியாயிற்று.
அடுத்த நாள். பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டு, வழக்கம்போல கடையைத் திறந்தேன். இன்று அதிக வியாபாரம். நான் சந்தோஷத்தில் குதூகலிக்கையில் பக்கத்துவீட்டு கோமதி அக்கா வந்தார்.
“தம்பி உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? பக்கத்து தெருவுல ஒரு பொணம் கெடக்குதாம்.. அனாத பொணம் போல இருக்கு… போலீசுக்கு சொல்லி இருக்காங்க.. வயசான ஆளு தான், என்ன பண்றது, யாருன்னு தெரியலையாம்.. பாவம்” உச்சு கொட்டினாள்..
“ஆமா அக்கா ரொம்ப பாவம்.. அதுவும் இந்த வயசான காலத்துல பாத்துக்க யாரும் இல்லைன்னா ரொம்பவே பாவம்…” சொல்லிக்கிட்டே போன எனக்கு சுரீர்னுச்சு.
கடைய அப்படியே போட்டுட்டு ஓடினேன்..
“கடையைப் பூட்டாம நீ பாட்டுக்கு போற?” அக்கா கத்தக் கத்த நான் வேகமா ஓடினேன்.
அதே தாத்தா தான்..
“அவரு கேட்ட பலூன கொடுத்திருக்கலாம்.. காசும் வச்சிருந்தாரு..
என்ன ஏதுன்னு கேட்காம நான் விரட்டியது ஞாபகம் வந்துச்சு.. கொஞ்ச நேரம் கதவு திறந்திருந்தா ஒன்னும் குறஞ்சு போய்டாது…” தொண்டையை அடைத்தது.
போலீசு அந்தப் பொணத்த எடுத்துட்டுப் போற வரைக்கும் இருந்தேன்.
அந்த இறப்பு மனச படுத்துச்சு.. வெளில வர முடியாம மனச என்னவோ செஞ்சுட்டே இருந்துச்சு.. யார் பலூன் கேட்டாலும், மனச பிசைஞ்சுச்சு..
“அந்த தாத்தா வயசானவர் தான்.. அவர் சொன்ன பள்ளிக்கூடம், இங்க எங்கயோ பக்கத்துல தான் இருக்கணும்”
கடையைச் சாத்திட்டு மத்தியான நேரத்துல அங்க போய் நின்னேன்.. சாப்பாட்டு நேரம்..
“எப்படியாச்சும் அந்த பையன இன்னிக்கு பாத்துடலாம்” மனசுல சின்னதா ஒரு சந்தோஷம்..
எதிர்பார்த்த மாதிரியே ஒரு சின்ன பையன் கேட்டுக்கு பக்கத்துல வந்து, எட்டி எட்டி பார்த்து, யாரையோ தேடுற மாதிரி இருந்துச்சு.. கையில சாப்பாட்டு டப்பா.. மெதுவா அவன் கிட்டப் போனேன்..
“என்ன தம்பி தாத்தாவ தேடுறியா?”
“இல்லையே.. நீங்க யாரு?” தயங்கித் தயங்கி… மருட்சியான விழிகள்…
பிறகு மெல்ல “ஆமா.. அவர காணும்.. சாப்பிடணும்..”
“பயப்படாத தம்பி, நான் சாப்பிட எதுவும் கொண்டு வரல.. எனக்கும் எதுவும் வேணாம்.. தாத்தாதான் என்ன அனுப்பினாரு. அவரு வேற ஊருக்குப் போயிட்டாராம். இத மட்டும் உங்கிட்ட கொடுக்க சொன்னாரு, இதை வச்சுக்கோ…”
மெல்ல கையை நீட்டினேன்.. ஒரு பை நிறைய வண்ண வண்ண பலூன்கள்.
ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தாலும், வாங்கிக்க மறுத்தான்.
“தம்பி, இது பலூன் தான். இங்கப் பக்கத்துல இருக்குற சதாசிவம் ஸ்டோர் தான் என்னோட சின்ன மளிகை கடை. நான் தான் ஓனர்.. உனக்கு எப்பப் பலூன் வேணுமோ, இங்கே வந்து வாங்கிக்கோ..”
ரொம்ப வற்புறுத்தி அவன் கையில திணிச்சுட்டு நான் கடையை நோக்கி நடந்தேன்.. எதுவோ பெருசா சாதிச்சுட்ட மாதிரி மனசு குதூகலிச்சுது. அதுவரைக்கும் இருந்த பாரம் எல்லாம் நீங்கி, காத்தோட போனமாதிரி ஒரு உணர்வு வந்துருச்சு.
அன்னிக்கு ராத்திரி தான், நான் நிம்மதியா தூங்கினேன்…
– கதைப் படிக்கலாம் – 71
இதையும் படியுங்கள் : மரணம் மன்னிக்கப்பட்டது