ஆப்கானிஸ்தானின் அரசியல் நிலவரம் குறித்து இந்திய பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அமைச்சர்களுடன் நேற்று (செப்டம்பர் 6) மாலை ஆலோசனை நடத்தினார்.
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை தலிபான்கள் ஆக்கிரமித்த நிலையில் அந்நாட்டு அதிபர் அப்ஷ்ரப் கனி விமானத்தில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று ஆப்கனில் இருந்த அமெரிக்காவின் கடைசி ராணுவ வீரரும், விமானமும் ஆப்கன் மண்ணில் இருந்து பறந்த நிலையில், தலிபான்கள் புதிய அரசு அமைக்கும் முயற்சியில் இறங்கினர். இந்த நிலையில் வடகிழக்கு மாகாணமாக பஞ்ச்ஷீர் பகுதியில் தலிபான்களுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அங்குள்ள தலிபான் எதிர்ப்புப் படையினர் சுமார் 600 தலிபான்களைக் கொன்று குவித்ததாக செய்தி பரவியது. இந்த நிலையில் அந்த மாகாணத்தையும் நேற்று (செப்டம்பர் 6) தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆப்கானிஸ்தான் முழுமையும் கைப்பற்றியுள்ளனர் இது உலக அரசியல் அரங்கில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஆட்சி அமைப்பது தொடர்பாக தலிபான்களுக்கும் ஹக்கானி நெட்வொர்க் அமைப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதைத் தீர்த்து வைப்பதற்காக ஆப்கன் தலைநகர் காபூலுக்கு பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ தலைவர் சென்றார்.
இந்த நிலையில்தான் பிரதமர் மோடி ஆப்கானிஸ்தான் நிலைமை பற்றி முக்கிய ஆலோசனை ஒன்றை டெல்லியில் நடத்தினார். பிரதமர் இல்லத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பங்கேற்றனர்.
கடந்த வாரம், கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல் தோஹாவில் தலிபான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆப்கானிஸ்தான் மண் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தலிபான்களிடம் இந்திய அரசு தெரிவித்தது. அதேபோல ஆப்கானில் இந்தியாவின் முதலீட்டுத் திட்டங்கள் தொடர வேண்டும் என்று தலிபான்கள் பதிலுக்கு கூறியதாகவும் செய்திகள் வந்தன.
ஆனால், தலிபான்கள் சொல்வது ஒன்று; செய்வது ஒன்று என்பதே இதுவரையான நிலைமையாக இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான சதிச் செயல்களைச் செய்து வரும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவர் காபூல் சென்று தலிபான்கள் அரசு அமைப்பது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டதும், தலிபான்களுக்கும் சீனாவுக்குமான உறவும் உறுதிப்படுத்தப்பட்டு வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டிருப்பதும் இந்தியாவிற்கான அச்சுறுத்தல்களாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பூகோள ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இந்தியாவுக்கு முக்கியமான இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் நிலைமை பற்றி பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.
ஆப்கானிஸ்தானில் மாறிவரும் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு இந்தியாவின் உடனடி முன்னுரிமைகளில் கவனம் செலுத்த பிரதமர் மோடி ஓர் உயர்மட்ட குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவில் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் உள்ளனர்.