கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படும் நபர்களுக்கு, 18 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று இங்கிலாந்து. அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மிகவும் மோசமான நிலைக்கு சென்று தீவிர சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் பெற்றார்.
அதுதொடர்ந்து, அரசின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக அங்கு நோய்த்தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. இதங்காரணமாக, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், அங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் 2-ம் கட்டமாக நோய்த் தொற்று பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதை தடுக்க இங்கிலாந்து முழுவதும் கொரோனா பரிசோதனைகள் தீவிரபடுத்தப்பட்டு உள்ளது. அந்த பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்த நபர்கள் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அப்படி தனிமைப்படுத்திக் கொள்ளும்போது பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே, அந்நாட்டு மக்கள் மாத கணக்கில் பொதுமுடக்கத்தில் சிக்கி தவித்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்டால் வேலைக்கு செல்லும் நபர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.
இதனால் தனிமைப்படுத்தும் 14 நாட்கள் வேலை இழக்கும் நபர்களுக்கு இந்திய மதிப்பில், 17,759 ரூபாய் ( 182 பவுண்டு) நிவாரணமாக வழங்கப்படும் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
அதுவும் மிகவும் அதிகமான தொற்று உள்ள இடங்களில் மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.