கொரோனா காரணமாக கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபை கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. கிராம சபை என்பது நமது கிராமங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள மிகப்பெரும் வரப்பிரசாதம் அதாவது நமது ஊராட்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெறக்கூடிய மாபெரும் அடிப்படை உரிமை மற்றும் நமது ஊராட்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் பெறக்கூடிய சலுகை ஆகும் இது நாம் ஒருபோதும் தவற விடக்கூடாது நமது ஊராட்சியில் நடைபெறும் அனைத்து விதமான பணிகள் மற்றும் ஊழல்களை வெளிக் கொண்டுவர மிக நல்ல ஒரு வாய்ப்பு நாம் அனைவரும் இது கட்டாயம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கிராம சபை கூட்டம் தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்களால் அனைத்து கிராமங்களிலும் ஒரே நாளில் கூட்டப்படுகின்றது. இதன் மூலம் கிராமங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்த முடியும். இந்த கூட்டத்தின்போது மக்களின் தேவைகளை கேட்டறிந்து அதற்கான தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது. இத்தகைய தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு அரசு உதவி புரிகின்றது.
ஒரு ஊரில் கிராம பஞ்சாயத்தில் உள்ள ஒரு தலைவரின் ஊழல் செயல்பாடுகளை தடுத்து அவ்வூர் மக்கள் ஒன்றிணைந்து அந்த மக்களுக்காக வேலை செய்பவராக மாற்ற முடியவில்லை எனில் ஒரு மந்திரியோ முதல்வரையோ மக்கள் நலனுக்காக வேலை செய்யுங்கள் என்று மக்கள் எப்படி அவர்களை கேட்க முடியும்? இந்தக் கேள்வியை நன்கு யோசித்து பாருங்கள். இதற்கு கிராமசபை பெரிதும் உதவுகின்றது. நாம் நினைத்தால் ஊழல் இல்லாத நாட்டை உருவாக்க முடியும். முதலில் நாம் கிராமங்களை மாற்றுவோம், பின்னர் நம்மூரை, நகரை , மாநிலத்தை, நாட்டை, உலகை மாற்றுவதற்கான பணிகளை செய்வோம். ஆக இத்தகைய கிராம சபைக் கூட்டத்தைப் பற்றிய தெளிவான அடிப்படை அறிவினை நாம் அனைவரும் பெற்றிருக்க வேண்டும். இந்த பதிவில் கிராம சபை கூட்டத்தை பற்றிய தகவல்களை கேள்வி பதில்களாக காணப் போகின்றோம்.
1. எந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும்?
ஜனவரி 26 – குடியரசு தினம்
மே 1 – உழைப்பாளர் தினம்
ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்
அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி
2. தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிளும் ஒரே நாளில் கிராமசபை கூட்டம் நடைபெறுமா?
ஆம். தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளில் உம் ஒரே நாளில் தான் கிராம சபை கூட்டம் நடைபெறும்.
3. கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு கொடுக்க வேண்டிய பொறுப்பு யாருடையது?
உங்கள் கிராம ஊராட்சி தான் கிராமசபை கூட்டத்திற்கான அறிவிப்பை கொடுக்க வேண்டும். உங்கள் பஞ்சாயத்துத் தலைவரோ அல்லது கிராம சபைக் கூட்டத்திற்கு பொறுப்பேற்றுக் கொண்டவரோ பஞ்சாயத்துகளுக்கு கிராம சபை கூட்டம் நடைபெறும் தேதி, இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
4. கிராம சபை கூட்டம் எந்த இடத்தில் நடக்கும்?
உங்கள் கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும். பஞ்சாயத்து அலுவலகத்தில் சமுதாயக் கூடத்தில் வேறு ஒரு பொது இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும்.
5. கிராமசபை கூட்டம் எப்போதும் ஒரே இடத்தில் தான் நடத்த வேண்டுமா?
அப்படி இல்லை. உங்கள் ஊராட்சிக்குட்பட்ட எந்த ஒரு பொது இடத்திலும் கிராம சபை கூட்டம் நடத்தலாம். பல கிராமங்களைக் கொண்ட ஒரு கிராம பஞ்சாயத்தில் ஒவ்வொரு கிராம சபை கூட்டத்தை ஒவ்வொரு கிராமத்தில் சுழற்சி முறையில் நடத்தலாம்.
6. கிராம சபையில் அனைவரும் தரையில் தான் அமர வேண்டுமா?
அதிகாரிகள் வந்தால் நாற்காலியில் அமரலாம். கிராம சபையில் அனைவரும் சமமாக அமர வேண்டும் என்பது சட்டவிதி. பொதுவாக அனைவரும் தரையில் தான் அமர்வார்கள். முதலமைச்சரே வந்தாலும் கிராம சபையில் மக்களுடன் சமமாகத்தான் அமர வேண்டும். உங்கள் ஊர் கிராம சபைக்கு பிரதம மந்திரி வருகிறார் என்றால் கிராம மக்கள் தரையில் அமர்ந்து இருந்தால் பிரதமரும் தரையில் தான் அமர வேண்டும்.
7. கிராம சபை கூட்டத்தை நடத்தாமல் இருக்க முடியுமா?
முடியவே முடியாது. குறிப்பிட்டுள்ள 4 தேதிகளில் கட்டாயம் கிராம சபை கூட்டம் நடைபெறும். கூட்டம் நடைபெறாமல் இருக்குமேயானால் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவரும் வட்டார வளர்ச்சி அலுவலர் தான் பொறுப்பேற்க வேண்டும். கிராம சபை கூட்டம் நடக்காமல் போனால் பஞ்சாயத்துகளின் ஆய்வாளர் என்ற முறையில் மாவட்ட ஆட்சியர் பதில் சொல்லக் கடமைப்பட்டவர் ஆவார்.
மேலும் சில பஞ்சாயத்துகளில் மக்களுக்கு அறிவிப்பு கொடுக்காமல் கையெழுத்து மட்டும் வாங்கிக்கொண்டு கிராம சபை கூட்டம் நடந்ததாகப் பதிவு செய்யப்படுவதாக சில புகார்கள் வருவதுண்டு. அவ்வாறு நடக்க கிராம மக்கள் அனுமதிக்கக் கூடாது. மேலும் மாவட்ட ஆட்சியருக்கு இதைப் பற்றி புகார் தெரிவிக்க வேண்டும்.
8. கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் யாரிடம் புகார் கொடுப்பது?
குறிப்பிட்ட தேதிகளில் கிராம சபை கூட்டம் கட்டாயம் நடந்தே ஆக வேண்டும். முறையான அறிவிப்பு இல்லாததால் தான் பல ஊர்களில் கிராம சபை கூட்டம் நடப்பது மக்களுக்குத் தெரிவதில்லை. அதனால் கிராமசபை நடக்கவில்லை என நினைத்துக் கொள்கிறார்கள். கிராமசபை கூட்டங்கள் பற்றிய அறிவிப்பு கொடுக்க வேண்டும் என கிராம ஊராட்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைக்க வேண்டும்.
9. கிராம சபையில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?
கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் கிராம சபையில் கலந்து கொள்ளலாம் ஆண்கள் பெண்கள் முதியவர் பட்டியல் பிரிவினர் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.
10. இவர் கிராம சபையில் கலந்து கொள்ளக் கூடாது என யாரையாவது ஒதுக்கி வைக்க முடியுமா?
முடியாது. உங்கள் கிராம பஞ்சாயத்து வாக்காளர் அனைவரும் உங்கள் கிராம சபையின் உறுப்பினர்கள் ஆவர். எனவே அவர்கள் அனைவரும் கிராம சபையில் கலந்து கொள்ள உரிமை படைத்தவர்கள்.
11. பக்கத்து ஊர் கிராம சபையில் நான் கலந்து கொள்ளலாமா?
கலந்து கொள்ளலாம். ஆனால் உங்களின் வாக்கு எந்த பஞ்சாயத்தில் உள்ளதோ அந்த கிராம சபையில் மட்டுமே நீங்கள் உறுப்பினர். மற்ற கிராமத்தின் கிராம சபையில் நீங்கள் பார்வையாளர்களாக இருக்கலாம்.
12. கிராம சபையில் குறைந்தபட்சம் எத்தனை பேர் கலந்து கொள்ள வேண்டும்?
உங்கள் கிராம பஞ்சாயத்தில் மக்கள் தொகை 500 பேர் என்றால் குறைந்தபட்சம் 50 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த கிராம சபை நடந்ததாக ஏற்றுக்கொள்ளப்படும். அதே போல் உங்கள் கிராம பஞ்சாயத்தின் மக்கள் தொகை 501 முதல் 3000 வரை என்றால் 100 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும். 3001 முதல் 10 ஆயிரம் பேர் கொண்ட கிராமத்தில் 200 பேரும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை.
13. அரசாணையில் குறிப்பிட்டுள்ள அளவு மக்கள் கலந்து கொள்ளாத போது கிராம சபையின் நிலை என்ன?
அரசாணையில் குறிப்பிட்டுள்ள அளவிற்கு கிராம சபையில் மக்கள் கலந்து கொள்ளாத போது கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டு வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்படும்.
14. கிராம சபையின் தலைவர் யார்?
கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவர். பஞ்சாயத்து தலைவர் இல்லாத போது துணைத்தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத்தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் கிராம சபையின் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார்.
15. சிறப்பு கிராம சபை என்றால் என்ன?
தமிழகத்தின் நான்கு நாட்கள் கிராம சபை கூட்டம் நடைபெறும் அந்த நான்கு கிராம சபைகளையும் தாண்டி மற்ற ஏதேனும் காரணங்களுக்காக கூடுதலாக கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மக்கள் நினைத்தால் சிறப்பு கிராம சபை கூட்டத்தை நடத்தலாம். அவ்வாறு கூட்டப்படும் கிராமசபை ஆனது சிறப்பு கிராம சபை என்று அழைக்கப்படும்.
16. சிறப்பு கிராம சபையைக் கூட்ட பஞ்சாயத்து தலைவர் முன் வராவிட்டால் என்ன செய்வது?
சிறப்பு கிராம சபை கூட்டத்தை கூட்ட பஞ்சாயத்து தலைவர் மறுத்தால் மக்கள் தங்களுக்குள் ஒரு தலைவனை வைத்துக்கொள்ளலாம். சிறப்பு கிராம சபைக்கு மட்டும் அவர் தலைவராக இருப்பார். சிறப்பு கிராம சபை கூட்ட மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்க வேண்டும்.
17. எந்தெந்த விஷயங்களுக்கு கிராம சபையில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றலாம்?
உங்கள் கிராமத்திற்கு சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயத்திற்கும் அல்லது தேவைக்கும் கிராம சபை தீர்மானம் நிறைவேற்றலாம். பக்கத்து கிராமத்தின் பிரச்சனையை தீர்க்க அல்லது மாநில அளவில் சில கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்று உங்கள் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுவது பயனளிக்காது.
உதாரணமாக உங்கள் கிராமத்தில் இருக்கும் ஏரி அல்லது குளத்தில் பாதுகாக்க தீர்மானம் கொண்டு வரலாம். ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் அரசு பாதுகாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றுவது பயனளிக்காது. மேலும் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாக கிராம சபை தீர்மானம் இருக்க வேண்டும். அதாவது மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம், தனிநபர் உரிமை போன்ற விஷயங்களை மீறுவதாக உங்கள் கிராம சபை தீர்மானம் இருக்கக் கூடாது.
18. டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றலாமா?
நிச்சயமாக நிறைவேற்றலாம். உங்கள் கிராமத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று உங்கள் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றலாம். உங்கள் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடை இல்லை என்றாலும் புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றலாம். சிறப்பு கிராமசபை கூட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றலாம். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்ற பொது மக்களாகிய நமக்கு 100% உரிமை இருக்கின்றது. இது நம் அரசியலமைப்புச்சட்டம் கொடுத்துள்ள ஜனநாயக உரிமை. கிராம சபையில் இவ்வாறு தீர்மானம் கொண்டுவர மக்கள் கோரிக்கை வைத்தால் அதை தடை சொல்ல அரசு அதிகாரிக்கு பஞ்சாயத்து தலைவருக்கு அதிகாரம் கிடையாது.
19. தீர்மானம் இந்த வடிவில்தான் இருக்க வேண்டும் என வரையறை ஏதும் உள்ளதா?
இல்லை. இயல்பான வாக்கியங்களைக் கொண்டு கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றலாம். இந்த வடிவில்தான் இருக்க வேண்டும் என எந்த விதமான நிபந்தனையும் இல்லை.
20. மக்கள் முன் மொழியும் தீர்மானத்தை பஞ்சாயத்துத் தலைவரோ அதிகாரிகளோ நிராகரிக்க முடியுமா?
கிராமசபை பஞ்சாயத்துத் தலைவரோ அதிகாரிகளோ மக்களின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது. கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சரி அல்லது தவறு என முடிவு எடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.
21. கிராம சபையில் எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றலாம்?
இத்தனை தீர்மானங்கள் தான் நிறைவேற்ற வேண்டும் என்று வரையறை எதுவுமில்லை. எண்ணிக்கை வரம்பு இல்லை என்ற காரணத்தால் எண்ணற்ற தீர்மானங்கள் நிறைவேற்றுவதில் பயனில்லை. நியமான மற்றும் குறிப்பிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி அதை நடைமுறைப்படுத்தி பயன்பெற வேண்டும்.
22. கிராமசபை தீர்மானம் எங்கெல்லாம் செல்லுபடி ஆகும்?
சட்டமன்ற நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராமசபை தீர்மானத்திற்கு உண்டு. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும் எந்தவொரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும். அரசு அலுவலகங்களிலும் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
23. கிராமசபை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது?
பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகள் கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு உடையவர்கள். கிராம இளைஞர்கள் மகளிர் மற்றும் தன்னார்வலர்கள் முயற்சி எடுத்து அரசு அதிகாரிகளுக்கு மற்றும் தலைவர் உட்பட பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு நினைவூட்டல் அனுப்பி கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்தலாம்.
24. கிராம சபை தீர்மானம் எத்தனை நாட்களுக்கு செல்லுபடியாகும்?
கிராம சபை தீர்மானம் காலாவதி ஆகாது. ஒருமுறை சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சூழலின் தன்மை கருதி விவாதித்து மறுபரிசீலனை செய்து மாற்றம் செய்தோ அல்லது மறுத்தோ தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலோ முந்தைய தீர்மானம் செயலிழக்க கூடும்.
25. கிராம சபை தீர்மானத்தின் நகலை கிராமசபை கிராம மக்கள் பெற முடியுமா அதற்கு கட்டணம் ஏதும் செலுத்த வேண்டுமா?
கிராம சபை தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் நிச்சயம் பெற முடியும் அதற்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
26. கிராமசபை தீர்மான நகலை தர பஞ்சாயத்துத் தலைவரோ கிளர்க்கோ மறுத்தால் என்ன செய்வது?
கிராம சபை தீர்மானத்தின் நகலை தரமுடியாது என பஞ்சாயத்து தலைவறும் சொல்ல முடியாது. உங்கள் தொடர் கோரிக்கையையும் மீறி அவர் கிராம சபை தீர்மானத்தின் நகலை தர முன்வரவில்லை என்றால் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் மூலம் கிராம சபை தீர்மானத்தின் நகலை பெற முடியும்.
27. முன்னுதாரண கிராமசபையின் காணப்படும் முக்கிய விஷயங்கள் என்னென்ன?
மக்கள் சொல்வதை தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கவனமாக கேட்பது, மக்களின் சந்தேகங்களுக்கு முறையாக பதிலளிப்பது, மகளிர் மட்டும் பட்டியல் பிரிவினருக்கு உரிய அங்கீகாரம் வழங்குதல், பஞ்சாயத்தில் வரவு செலவு கணக்கை மக்கள் முன் வாசித்து காட்டுதல், முறையான சமூக தணிக்கை நடைபெறுவது, கிராம வளர்ச்சிக்காக விவாதிப்பது, கிராம வளர்ச்சித் திட்டத்தை கிராம சபை மூலம் தயார் செய்வது உள்ளிட்டவை அடங்கும்.
28. கிராமசபை தீர்மானங்கள் வெற்றி பெற முன்னுதாரணங்கள் ஏதேனும் உண்டா?
பல முன்னுதாரணங்கள் உண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 100 ஏக்கர் நிலத்தில் சில நிறுவனங்கள் தங்களது கழிவுகளை கொட்ட முயற்சித்தன. அருகில் இருந்த நகரங்கள் கிராம மக்கள் வழியறியாது தவித்தனர். அந்த எளிய மக்களுக்கு சரியான நேரத்தில் கை கொடுத்தது கிராமசபை. கிராம சபையின் அதிகாரங்கள் அறிந்த மக்கள் தங்கள் கிராமத்தை அழிக்க வந்த திட்டம் வேண்டாம் என கிராம சபையில் ஒருமனதாக தீர்மானம் இயற்றினார். மக்கள் தொடர்ந்து ஜனநாயக முறையில் போராடி வந்தனர்.
மக்கள் குரலுக்கு செவிசாய்த்து நீதிமன்றம் கிராம சபை தீர்மானத்தை முக்கிய ஆவணமாக ஏற்றுக்கொண்டு பல ஆய்வு முடிவுகளையும் கருத்தில் எடுத்துக் கொண்டது. உயர்நீதிமன்றம் கழிவுகளை கொட்டுவதற்கு தடை விதித்தது. பசுமை தீர்ப்பாயம் அதை உறுதிப்படுத்தியது. கிராமத்தின் பசுமை காக்க கிராமசபை முக்கிய பங்காற்றியது.
கிராமத்தில் பழங்குடி மக்கள் புதிய குடியிருப்பு அமைத்து அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க பெரிதும் உதவியது. கிராமசபைக் இருந்த அதிகாரங்களை இப்படி பலவாறு பட்டியலிடலாம். கிராமங்களில் இயற்கை வளங்களை காக்கவும் ஏழை எளிய மக்களுக்கு நல்வாழ்வு அளிக்கவும் கைகொடுப்பது கிராம சபையே.
29. கிராம சபை தீர்மானத்தை வெற்றி பெறச் செய்வதற்கான வழிகள் என்ன?
கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றிய உடன் எல்லாம் நடந்து விடும் என முடிவு செய்துவிடக்கூடாது. தீர்மான நகலை பெற்றுக் கொண்டு கிராம இளைஞர்கள், மகளிர் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் முயற்சி எடுத்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் தலைவர் உட்பட பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கும் நினைவூட்டல் அனுப்பவேண்டும். தொடர்ந்து கண்காணித்து அதன் மூலமே கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியும்.