சென்னை புறநகர் ரயில் சேவையை தொடங்க அனுமதிக்கக் கோரி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ரயில் சேவை முடங்கியது. இதையடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள், மெட்ரோ ரயில் சேவை, மாநிலங்களுக்கு இடையே ரயில் போக்குவரத்து உள்ளிட்டவை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன், கடந்த மாதம் முதல் மீண்டும் இயங்கி வருகிறது. இருப்பினும் புறநகர் ரயில் இயக்கம் இல்லாததால் மக்கள் பேருந்துகளை மட்டுமே நம்பி இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வருவதால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் புறநகர் ரயில் சேவையை தொடங்க அனுமதிக்குமாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் பொதுமக்களுக்கும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் புறநகர் ரயில் சேவை உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாகவே புறநகர் ரயில் சேவையை தொடங்க அனுமதிக்குமாறு, செப்டம்பர் 2-ஆம் தேதி தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.