நெல்லை கொள்முதல் செய்ய போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் துரைமாணிக்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகின்றது. அறுவடையாகும் நெல்லைக் கொள்முதல் நிலையங்களில் தாமதமில்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும். அப்படிக் கொள்முதல் நடைபெறவில்லை. ஒரு நாளைக்கு 1000 மூட்டைகளுக்குக் குறையாமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென்று கொள்முதல் நிலையங்களுக்கு அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆனால், 300 முதல் 700 மூட்டைகள் மட்டும் கொள்முதல் செய்யப்படுகின்றது. கொள்முதல் செய்யப்படும் நெல்லைச் சேமித்து வைக்க போதிய இடவசதி இல்லாததால், அதிகமாகக் கொள்முதல் செய்ய முடியவில்லையென்று கொள்முதல் பணியாளர்கள் கூறுகின்றார்கள். ஒவ்வொரு ஆண்டும் இதே கருத்தைக் கூறி விவசாயிகள் பழிவாங்கப்படுகின்றார்கள்.
கொள்முதல் செய்யப்படும் நெல்லைச் சேமித்து வைக்க போதிய வசதியை தமிழ்நாடு அரசு ஏன் இதுவரை செய்யவில்லை? கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்காகக் கொண்டு வரும் நெல்லை 20 நாட்களுக்கு மேல் சாலை ஓரத்தில் கொட்டிக் காத்துக் கிடக்க வேண்டிய நிலை உள்ளது.
தொடர் மழையின் காரணமாக அந்த நெல் ஊறி ஈரப்பதம் அதிகரிப்பதுடன் முளைத்தும் விடுகிறது. இதனால், 22 சதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லைக் கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வரப்படும் நெல்லை அன்றாடம் கொள்முதல் செய்யும் வகையில் அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால வேகத்தில் எடுத்திட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். .