வேதா இல்லம் அரசுடமை ஆக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் என ஜெயலலிதாவின் அண்ணன் மகளான “தீபா” தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதற்கு ஜெயலலிதாவின் அண்ணனின் வாரிசுகளான ஜெயலலிதா சொத்துக்கு உரிமை உள்ளவர்களாக கருதப்படும் தீபா, தீபக் வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றும் நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த இழப்பீட்டு தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி உள்ளது.
24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா நிலையத்திற்கு இழப்பீட்டு தொகையாக ரூ.67.9 கோடியை நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்தது.இதன் மூலம் வேத இல்லம் அரசுடமை ஆக்கப்பட்டது.
மேலும் ஜெயலலிதா செலுத்தாமல் இருக்கும் வருமான வரி பாக்கி ரூ.36.9 கோடியை செலுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.இதனால் வேதா இல்லம் விரைவில் நினைவிடமாக மாற்றப்படுகிறது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் என ஜெயலலிதாவின் அண்ணன் மகளான “தீபா”தெரிவித்துள்ளார்.