கன்னியாகுமரி எம்.பி. எச்.வசந்தகுமாரின் மறைவு தமிழகத்திற்கே பேரிழப்பாகும் என்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி எம்.பி.யும், தொழிலதிபருமான எச்.வசந்தகுமார் இன்று கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவற்றின் விவரம் பின்வருமாறு:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் :-
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் எச்.வசந்தகுமார் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு பெரும் வேதனை அடைந்தேன். அவரது மறைவிற்குத் தி.மு.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.
கொரோனா அவரை நம்மிடமிருந்து அநியாயமாகப் பிரித்துச் சென்றது அதிர்ச்சியளிக்கிறது. சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோரின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர். அவரின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:-
எச்.வசந்தகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எனும் செய்தி அதிர்ச்சியையும் மனவேதனையையும் அளிக்கிறது. அவரது பிரிவினால் மீளாத்துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தாருக்கும் அவரது கட்சி தொண்டர்களுக்கும் அனுதாபங்களையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி :-
எச்.வசந்தகுமார் காலமான செய்தி கேட்டு கடும் அதிர்ச்சிக்கும், துயரத்திற்கும் ஆளாகியிருக்கிறேன். அருமை நண்பர் வசந்தகுமார் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே பேரிழப்பாகும். இளமை பருவம் முதல் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தம்மையே முழுமையாக அர்பணித்துக்கொண்டவர். மக்கள் நலப்பணியில் ஈடுபட்டதன் விளைவாக கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நம்மிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறார். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் :-
கன்னியாகுமரி எம்.பி. எச்.வசந்த்குமார் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். அவரின் மறைவுக்கும், அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், குமரி அனந்தன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் :-
எச்.வசந்தகுமார் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். சட்டப்பேரவை உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் :-
தொழிலதிபரும், மக்களவை உறுப்பினருமான வசந்த் குமார் காலமானார் என்பது பேரதிர்ச்சியும் பெருங்கவலையும் அளிக்கிறது. சந்திக்கும் போதெல்லாம் தட்டிக் கொடுத்து ஊக்கமளிப்பவர் எச்.வசந்தகுமார். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடினஉழைப்பு ஆகியவற்றின் அடையாளம். வெற்றிவீரருக்கு எமது வீரவணக்கம்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் :-
எச். வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மறைந்தது அதிர்ச்சியும், தீராத மனவேதனையும் அளிக்கிறது. அவரது மறைவு சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் :-
எச்.வசந்தகுமார் உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி மிகவும் வருத்தத்திற்குரியது.
உழைப்பால் உயர்ந்தவர் என்ற சொல்லுக்கு உகந்தவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இயக்கத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன்:-
எச்.வசந்தகுமார் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். எவ்வித அரசியல் சூழல் ஏற்பட்டாலும் தனது புன்னகையால் அனைவரையும் வசீகரித்த வசந்தகுமாரின் இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும்.
திருநாவுக்கரசர் எம்.பி. :-
எச். வசந்தகுமார் இயற்கை எய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியும், மன வருத்தமும் தருகிறது. அவரது அகால மரணம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது துணைவியார், மகன்கள் மற்றும் குடும்பத்தினர், அவரது சகோதரர் குமரி அனந்தன் உட்பட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறேன்.
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம்:
நடுத்தரக் குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர். அரசியலிலும் கறை படியாது வாழ்ந்து, மறைந்த திரு. வசந்தகுமார் அவர்களின் மறைவு தமிழகத்திற்கே இழப்பு.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்