தமிழக அரசு கிராம சபை கூட்டத்தை ரத்து செய்தது தேவையற்றது என்று வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவை:
பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் நேற்று கோவையில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
தமிழக அரசு காந்திஜெயந்தி தினத்தன்று நடக்க இருந்த கிராமசபைக் கூட்டத்தை ரத்து செய்தது தேவையற்றது. கிராமப்புற பகுதிகளில், கொரோனா பாதிப்பு குறைவு என்ற நிலையில், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி கூட்டத்தை நடத்தி இருக்கலாம்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தமிழக கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானங்களை நிறைவேற்றினால், அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. கிராமசபைக் கூட்டங்களை நடத்தியிருந்தால், வேளாண் சட்டங்கள் குறித்து மக்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்திருக்கும்.
துளசி யாத்திரை:
பூத் கமிட்டிகளை வலுப்படுத்தும் வகையில், கோவை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பா.ஜ.க.. சார்பில், துளசி யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.