சென்னையில் மதுக்கடைகளை திறக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பாதிப்பின் வீரியம் குறையாத சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது, மிக மோசமான முடிவு. இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் குறையவில்லை. இ- பாஸ் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்த பிறகும், அதனை ரத்து செய்தால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று காரணம் கூறி வரும் தமிழக அரசு, எப்படி மதுக்கடைகளைத் திறந்துவிட முடிவெடுத்தது என்று தெரியவில்லை. இது மனசாட்சி இல்லாத செயல். எனவே, சென்னையில் கொரோனா பாதிப்பை அதிகப்படுத்திடும் ஆபத்து நிறைந்த டாஸ்மாக் திறப்பு முடிவை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.