திருச்சி போலீஸ் கொலை சம்பவத்தில் 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது… ரகசிய இடத்தில் தீவிர விசாரணை!!

ஆடு திருடர்களை பிடிக்க தனது பைக்கில் விரட்டி சென்றபோது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்டு ரோட்டில் வீசப்பட்ட சம்பவத்தில் சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை அருகே ஆடு திருடியவர்களை பிடிக்க விரட்டி சென்றபோது திருச்சி நாவல்பட்டு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎஸ்பி தலைமையில் கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் உடனடியாக அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடம் அருகே மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திருச்சி மாவட்ட எல்லைப்பகுதிகளிலும் கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

நேற்றிரவு குற்றவாளிகள் குறித்த முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை ஆணையர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை இன்று தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 10 வயது, 17 வயதுடைய இரு சிறுவர்கள் மற்றும் 19 வயது இளைஞர் உட்பட 4 பேரையும் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறப்பு எஸ்ஐ கொலை வழக்கில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version