முல்லைப் பெரியாறு திட்டத்தின் மூலம் மதுரையில் குடிநீர் தட்டுப்பாடே இல்லை என்ற நிலை ஏற்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார். மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
முல்லைப் பெரியாறு
மதுரையில் நாளை மறுநாள் முதல்வர் தொடங்கி வைக்க உள்ள முல்லைப் பெரியாறு திட்டத்தின் மூலம் மதுரை மாநகராட்சியில் குடிநீர்த் தட்டுப்பாடே இல்லை என்ற நிலை ஏற்படும். லோயர் கேம்ப்பில் இருந்து 152 கிலோ மீட்டர் தூரம் பைப் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும்.
36 மாதம்
முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 185 மில்லியன் கன அடி தண்ணீர் கிடைக்கும். இதற்கான திட்டப் பணிகளுக்காண டெண்டர் முழுமையாக வழங்கப்பட்டுள்ள நிலையில் பணிகள் 36 மாதங்களில் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.
வீட்டிற்குள்ளே குடிநீர்
இனிமேல் மதுரை மக்கள் தண்ணீர் எடுக்கும் அண்டா, குண்டா அனைத்தையும் மூலையில் போட்டுவிட்டு வீட்டிற்குள்ளேயே செம்பில் தண்ணீர் பிடித்துக் குடிக்கலாம். மதுரை மாவட்ட வளர்ச்சிக்காக 1,295 கோடி ரூபாயில் தொடங்கவுள்ள முல்லைப் பெரியாறு திட்டத்தினைப் போன்ற திட்டத்தினை இதுவரை எந்த முதல்வரும் எந்தக் காலத்திலும் மதுரைக்கு வழங்கியதே கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.