தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செய்ததற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருந்த நிபுணத்துவ உறுப்பினர்கள் பதவிக்கு மத்திய அரசு சமீபத்தில் பணிநியமன உத்தரவை பிறப்பித்தது. இதில், ஓய்வுபெற்ற தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஓய்வுபெற்ற வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி அருண்குமார் வர்மா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், கிரிஜா வைத்தியநாதனுக்கு சுற்றுச்சூழலில் போதிய அனுபவம் இல்லை எனவும், கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கையும் வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வு குழு தற்காலிகமாக கிரிஜா வைத்தியநாதன் பணி நியமனத்திற்கு தடை விதித்தது.
Read more – மதுரையில் பக்தர்களுக்கு அனுமதியில்லாத சித்திரை திருவிழா… மாவட்ட ஆட்சியர் தகவல்…
மேலும், இந்த வழக்கு தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை, மத்திய பணியாளர் துறை, கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் பதிலளிக்க கோரி உத்தரவிட்டு, ஏப்ரல் 16 ம் தேதிக்கு இந்த பணி நியமன வழக்கை ஒத்தி வைத்தனர்.




