நூலகத்துறையின் செயல்பாடுகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கம்தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நூலகத்துறை
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் முக்கியப் பிரிவுகளில் பொது நூலகத்துறை கீழ் 4,500க்கும் மேற்பட்ட நூலகங்கள் தமிழகம் முழுவதும் இயங்கி வருகின்றன. இந்நூலகங்களில், ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் பல கோடி ரூபாய் செலவில் தமிழக அரசால் வாங்கப்பட்டு வருகின்றன.
ஆனால், அவ்வாறு வாங்கப்படும் புத்தகங்கள், அவற்றின் எண்ணிக்கை, அவற்றை வெளியிட்ட பதிப்பகங்கள், செலவிடப்பட்ட தொகை குறித்து எந்த வெளிப்படைத் தன்மையும் தற்போது கடைப்பிடிக்கப்படவில்லை.
குற்றச்சாட்டு
பொது நூலகத்துறையின் மூலம் அண்மைக்காலமாக வாங்கப்பட்ட நூல்களில் சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்கள் கூட இடம்பெறவில்லை என்பதும், குறிப்பிட்ட சில இடைத்தரகர்களுடன் மட்டுமே கை கோத்து புத்தகங்கள் வாங்கப்படுவதாகவும், ஒரே புத்தகம் பல பெயர்களில் அச்சிடப்பட்டு வாங்கப்படுவதாகவும் பரவலான குற்றச்சாட்டுகள் தற்போது எழுந்திருக்கின்றன.
வெள்ளை அறிக்கை
நல வாரியத்தின் மூலம் மேற்கொள்ள வேண்டிய நலத்திட்டங்களுக்காகத் தொடர்ந்து புத்தக வெளியீட்டாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 2.5 சதவீதத் தொகை மூலம் கடந்த பத்தாண்டுகளில் ஒருவருக்கேனும் உதவி செய்யப்பட்டுள்ளதா?
நூலகத்துறை தன் மீது படர்ந்திருக்கும் களங்கத்தைக் கழுவிக்கொள்ளும் பொருட்டு, வெளிப்படைத் தன்மையை உறுதி செய்து, நூலகத்துறை சார்பில் அண்மைக்காலமாக வாங்கப்பட்ட அனைத்து நூல்கள், அவற்றின் எண்ணிக்கை, பதிப்பாளர்கள், தொகை குறித்த முழு விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும். தரமான படைப்புகளை பொது நூலகங்களுக்கான பயன்பாட்டிற்காக வாங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.