தமிழகத்தில் மாநகராட்சிகளில் ஆண்டு வருவாய் 10 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் வரும் 10-ஆம் தேதி முதல் திறக்கலாம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி வருகிறது. சேலம், தலைவாசல் அருகே கூட்டு ரோட்டில் பிரம்மாண்டமான கால்நடை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி உருவாக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் வேகமாக விரைவாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. ஆறு மாதத்திற்குள் அந்தப் பணிகள் நிறைவு பெறுமெனக் கருதுகிறேன்.
மேட்டூர், ஓமலூர், சங்ககிரி மற்றும் எடப்பாடி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வறண்ட பகுதிகளிலுள்ள 100 ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, இன்னும் ஆறு மாதத்திற்குள் அந்த பணிகள் நிறைவுபெறும். அவ்வாறு நிறைவு பெறும்பொழுது, ஏரிகளில் தண்ணீர் நிரம்பி, விவசாயிகள், பொதுமக்களுக்கு தேவையான நீர் கிடைக்கும். மழைக் காலங்களில் அணை நிரம்பி, உபரி நீர் வெளியேறும் காலகட்டங்களில், அந்த உபரி நீரை இந்த ஏரிகளில் நிரப்புவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.
இப்பொழுது கர்நாடகத்தில் கபினி, கே.எஸ்.ஆர் அணைகளிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் எதிர்பார்த்தபடி அணை நிரம்ப கூடிய சூழ்நிலை உள்ளது. சுமார் 1.40 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. பவானிசாகரிலிருந்தும் அதிகமாகத் தண்ணீர் வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பருவமழை நன்றாக பெய்து கொண்டிருக்கிறது. அனைத்து அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே டெல்டா பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு, டெல்டா பகுதிகளில் 3.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் வேளாண் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது, தற்போது 4 லட்சம் ஏக்கர் பரப்பளவு என கூடுதலாக 50 ஆயிரம் ஏக்கர் டெல்டா பகுதிகளில் நடவு செய்யதுள்ளார்கள்.
மேலும் சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களின் விவரம் கீழே,
கேள்வி: கொரோனா களப்பணியில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் நிவாரண உதவி தரவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைக்கிறார்களே? பதில்: கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு, நேரடியாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிட்டால், ரூபாய் 50 லட்சம் வழங்கப்படுமென நான் ஏற்கனவே அறிவித்தேன். மத்திய அரசாங்கமே அதனை இன்ஷ்யூரன்ஸ் மூலம் கொடுப்பதாக அறிவித்துவிட்டார்கள். மற்றப் பணியாளர்களுக்கு ரூபாய் 10 லட்சம் என்று அறிவித்தோம். அதனை தற்போது ரூபாய் 25 லட்சமாக உயர்த்தியுள்ளோம். பிற பணியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுப் பணியில் ஈடுபட்டிருக்கும்பொழுது தொற்று ஏற்பட்டு இறந்தால் அவர்களுக்கு 25 லட்ச ரூபாய் கொடுக்கிறோம், குடும்பத்தில் தகுதியுள்ளவர்களுக்கு வேலை கொடுக்கிறோம்.
கேள்வி: மத்திய அரசு மும்மொழி கொள்கை நிச்சயமாக நிறைவேற்றும், மாநில அரசு தடுக்க முடியாதென்று தெரிவித்துள்ளதற்கு தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? பதில்: மாநில அரசின் நிலைப்பாடு இருமொழிக் கொள்கை. தமிழ், ஆங்கிலம் தான். அதை அரசு தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கடைபிடித்து வந்ததை அரசும் தொடர்ந்து பின்பற்றி நடைமுறைப்படுத்தும். அதற்கென்று ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு, இதன் சாதக பாதகங்களை கண்டறிந்து அளிக்கும் அறிக்கையின்படி அரசு செயல்படும்.
கேள்வி: பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும்? பதில்: கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை. குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். முதலில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆகவே, இந்தியா முழுவதுமுள்ள நிலைமைக்கு ஏற்றவாறு தமிழ்நாடும் செயல்படும். நம்முடைய மாநிலத்தை பொறுத்தவரை, மக்களைக் காக்க வேண்டும், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நிலைமை சீராகும்பொழுது நிச்சயமாக பள்ளிகள் திறக்கப்படும்.
கேள்வி: நீலகிரி மாவட்டத்தில் மழையின் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? பதில்: மழை அதிகமாகும்பொழுது மலைச்சரிவு ஏற்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்தக் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களை பள்ளிகளில் தங்கவைத்து அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் பிற வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். உள்ளாட்சித்துறை அமைச்சர், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் இருவரும் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்கள். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று அரசு இயந்திரம் முடுக்கிவிடப்பட்டு, பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கேள்வி: இ-பாஸ் முறையில் ஏதேனும் மாற்றம் செய்யப்படுமா? பதில்: இ-பாஸ் குறித்து ஏற்கனவே தெளிவாகத் தெரிவித்துள்ளேன். இதற்காக கூடுதலாக ஒரு குழு அமைக்கப்பட்டு, இப்பொழுது 2 குழுக்கள் செயல்படுகின்றன. மக்கள், அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தால் உடனடியாக வழங்குவதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இ-பாஸ் வழங்குவதற்கு எளிமையான முறையை கடைபிடிக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.
கேள்வி: சென்னையில் கூடுதல் தளர்வுகள் இருக்குமா? பதில்: ஏற்கனவே சென்னைக்கு போதுமான தளர்வைக் கொடுத்துள்ளோம். உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, ஐ.சி.எம்.ஆர்., நம்முடைய மருத்துவ நிபுணர்கள் ஆகியோர் தெரிவிக்கின்ற ஆலோசனைகளின் அடிப்படையில்தான் நாங்கள் செயல்படுகிறோம். ஒவ்வொருவரும், தாங்களாக அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளைப் பின்பற்றினால் நாம் இயல்பு நிலைக்கு எளிதாகத் திரும்பி விடலாம். பிளாஸ்மா சிகிச்சை நாம் மேற்கொண்டு வருகிறோம். அது நல்ல பலனை அளிக்கிறது. சென்னையில் 57 நபர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சையைக் கொடுத்திருக்கிறோம். பெரும்பாலானவர்கள் குணமடைந்து இருக்கிறார்கள். எனவே, தொற்று ஏற்பட்டு குணமடைந்து வீடு திரும்பி 14 நாட்கள் கழித்து பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்தால் குணமடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கேள்வி: மேட்டூர் கால்வாய்ப் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? பதில்: இப்பொழுதுதான் அணையில் தண்ணீர் உயர்ந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் ஓரளவு வந்தவுடன் மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
கேள்வி: தமிழகத்தில் இதே கூட்டணி தொடருமா? பதில்: தேர்தல் வருகிற காலத்தில் அதைப்பற்றி பேசலாம்.
கேள்வி: தமிழக முதல்வரையும், அரசையும் எஸ்.வி.சேகர் தொடர்ந்து விமர்சிக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? பதில்: அவரை ஒரு பெரிய அரசியல் கட்சித் தலைவராக நாங்கள் எண்ணவில்லை. அவர் பா.ஜ.க.வில் இருப்பதாகச் சொன்னால், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மத்தியில் நாங்களெல்லாம் வீடு, வீடாகச் சென்று ஓட்டு கேட்டோம். அவர் எங்கு போய் ஓட்டு கேட்டார்? எங்கேயும் கேட்கவில்லையே? அவர் ஒரு கட்சியினுடைய தலைவராக இருந்தால், ஏன் இந்த பிரதமர் மோடியின் வெற்றிக்காக அவர் பாடுபடவில்லை? அவரை ஒரு பொருட்டாகக் கருதவில்லை.
மேலும், தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
மாநகராட்சி பகுதிகளில் உள்ள ரூபாய் 10 ஆயிரத்திற்கும் குறைவான வருவாய் உள்ள சிறிய திருக்கோயில்கள், மசூதிகள், தர்க்காக்கள், தேவலாயங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் வரும் 10-ந் தேதி முதல் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. மேலும், தமிழகம் முழுவதும் வரும் 10-ந் தேதி முதல் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என அவர் பதிவிட்டுள்ளார்.