தமிழகத்தில் நீலகிரி, கோவை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று திவிரமடைந்ததுள்ள நிலையில், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. அந்த வகையில், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதுவும் நீலகிரியில் பலத்த காற்றுடன் மழை பெய்கிறது. அதனால், ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதோடு, ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்மேற்கு பருவகாற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிரம் அடைந்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் வருகிற 10ம் தேதி வரை இந்த பகுதிகளில் கன மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் மிக கனமழை பெய்யும். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், வேலூர் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடலில் 3.5 மீட்டரில் இருந்து 4.2 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பக்கூடும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.