தமிழகத்தில் தற்போது பொதுமுடக்கம் அறிவிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவிலிருந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட போவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன இது குறித்து அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு கூறியிருக்கும் பதில்கள் பின்வருமாறு:
மருத்துவக் குழுக்கள் வல்லுநர்கள் தரும் தகவல்களின் அடிப்படையிலேயே தமிழகத்தில் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. எனவே தமிழகத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட வேண்டிய எந்தவித அவசியமும் நேரிடவில்லை.
சென்னையில் தொற்றுக்கள் கட்டுக்குள் வந்துள்ளது எனினும் தமிழக அரசு தொடர்ந்து காய்ச்சல் முகாம்களை நடத்தி கொண்டு வருகிறது கொரோனா பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் அதிகளவு பரிசோதனையாக நாள் ஒன்றுக்கு 85,000 க்கும் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. தொற்றை ஆரம்பக் காலத்திலேயே கண்டறிந்து சிகிச்சைகள் கொடுக்கப்படுவதால் இறப்பு எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது.
வேளாண் மசோதாவில் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே இதன் சிறப்பு அம்சத்தை பற்றி அரசு சார்பில் மக்களுக்கு எடுத்துரைக்கப்படும். கடலூர், திருப்பூர், கோவை போன்று மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு பணிகள் அந்தந்த மாவட்ட அமைச்சர்களால் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன.
மாநிலத்தில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ள போதிலும் குறைவான அளவே பஸ்கள் இயக்கப்படுவதால் பொது மக்கள் கூட்டமாக செல்லும் நிலையை தவிர்க்க கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து அமைச்சர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொரோனா காலத்திலும் மாவட்டந்தோறும் சென்று மக்களை நேரிடையாக சந்தித்து ஆறுதல் கூறி கள ஆய்வுகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார். இன்று மாலை பிரதமருடன் நடைபெறும் கூட்டத்தில் வழிமுறைகள் எவ்வாறு பின்பற்றபடுகிறது என்பது குறித்து முதல்வர் ஆலோசனை செய்வார்.