மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட விரும்புவோர் 60% வரை மானியம் பெற்றுக்கொள்ளலாம் என, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழக மீன்வளத் துறை சார்பில் உள்நாட்டு நீர் நிலைகள் மற்றும் மிதவைக் கூண்டுகளில் மீன் வளர்த்தல், மீன் விதை வங்கிகளை உருவாக்குதல், பாசன குளங்களில் தீவிர மீன் வளர்ப்பை மேற்கொள்ளுதல், பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பு ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு, ‘பிரதம மந்திரி மத்சிய சம்பட யோஜனா’ திட்டத்தின் கீழ், உள்நாட்டு மீனவர்களுக்கு, புதிய மீன் வளர்ப்பு பண்ணை அமைத்தல், மீன் குஞ்சு பொரிப்பகங்கள் அமைத்தல், மீன் குஞ்சு வளர்த்தெடுக்கும் பண்ணைகள் அமைத்தல், உள்ளீட்டு மானியம், மீன் விதைப் பண்ணை அமைத்தல், நீர் மறுசுழற்சி முறையில், மீன் வளர்ப்பு மற்றும் உயிர்கூழ்மம் முறையில் மீன் வளர்த்தல் போன்ற திட்டங்களை அறிவித்துள்ளது.
இத்திட்டங்களின் கீழ், மீன் வளர்ப்பு மேற்கொள்ள, பொதுப் பிரிவினருக்கு 40 சதவீத மானியமும், மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவினருக்கு, 60 சதவீதம் மானியம் வழங்கப்படும். இவற்றில் சேர விரும்பும் மீன் வளர்ப்போர், அந்தந்த மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.