தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கடிதம் அனுப்பியுள்ளார்.
கல்வியில் மறுசீரமைப்பு ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை வகுத்துள்ளது. இதில் கட்டாயமாக ஏதாவது ஒரு மூன்றாவது மொழியை மாணவர்கள் தேர்வு செய்து பயில வேண்டும் என அறிவுறுக்கப்பட்டுள்ளது.
இதற்கு தமிழகத்தில் இருந்த் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், இரு மொழிக்கொள்கையே தொடர வேண்டும் என திமுக உள்ள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே, உயர்கல்வியில் புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக, தமிழக அரசு, 7 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்துள்ளது.
இந்நிலையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும். பொது நுழைவுத்தேர்வை தமிழக அரசு எதிர்க்கிறது, தேசிய தேர்வு முகமை மூலம் நுழைவுத்தேர்வு நடத்துவது கிராமப்புற மாணவர்களை பாதிக்கும். மேலும், இருமொழி கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதால் அதனை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.