தமிழ் பாடங்களின் வகுப்புகளுக்கான நேரத்தை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று சென்னை பல்கலைகழகத்திற்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ் பாடநேரங்கள் குறைப்பு
தமிழ்நாட்டில் பட்டப்படிப்புக்கான பாடத்திட்டங்களைப் பொறுத்தவரை கலை மற்றும் அறிவியல் பாடங்களில் 6 பாடவேளைகள் மொழிப்பாடத்திற்கு, அதாவது தமிழ்ப் பாடத்திற்கு ஒதுக்கப்படும். இது தான் நடைமுறை. ஆனால், சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உத்தேசப் பாடத்திட்டத்தில் தமிழ் மொழிக்கான பாடவேளைகள் வாரத்திற்கு ஆறிலிருந்து நான்காக குறைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
ஆங்கிலப் பாடத்தில் மாணவர்களின் தேர்ச்சி மிகவும் குறைவாக இருப்பதாலும், போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் பங்கேற்கும் மாணவர்கள் ஆங்கிலம் பேச முடியாமல் தடுமாறுவதாலும் மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்துவதற்காக நான்கு பாடவேளைகள் ஒதுக்கப்பட இருப்பதாகவும், அதற்காகத் தான் தமிழுக்கான பாடவேளைகள் குறைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை ஏற்க முடியாது. மாணவர்களின் ஆங்கில மொழித்திறன் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
கைவிட வேண்டும்
கல்லூரி பருவத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் கல்வி சார்ந்த, சமூகம் சார்ந்த, எதிர்காலம் சார்ந்த பதற்றம் மற்றும் மன உளைச்சல்களைப் போக்குவதற்கான அருமருந்தாக திகழ்பவை தமிழ் இலக்கியங்கள் தான். பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளில் கற்பிக்கப்படும் தமிழை ஒரு மொழிப்பாடமாக மட்டும் பார்க்கக் கூடாது. அது ஒரு வாழ்க்கைப் பாடம். அதனால் தமிழ்ப்பாடவேளை குறைப்பை அனுமதிக்கவே முடியாது. எனவே, தமிழ்ப் பாடவேளைகளை குறைக்கும் முடிவை சென்னைப் பல்கலை. கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது