பல்கலைக்கழக விதிமுறைகளின்படியே அரியர் தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டதாக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னை:
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது:-
பேரறிஞர் அண்ணா வழியில் தமிழகத்தில் தொடர்ந்து தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உறுதியாக கடைப்பிடித்து வந்தனர்.எனவே தமிழகத்தில் எந்த ஒரு சூழ்நிலையிலும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தான் எதையும் செய்ய வேண்டும். இந்தியை எந்த நாளும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.அந்த உணர்வை யார் வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம். அது அவரவர் ஜனநாயக உரிமை.
கல்லூரிகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) வகுத்துள்ள விதிமுறைகளின்படியே முடிவு இந்த எடுக்கப்பட்டது.மேற்கண்ட இரு அமைப்புகள் வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றியே அரசு அறிவிப்பு வெளியிட்டது. தற்போது அரியர் மாணவர்கள் விவகாரத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகிறது.
இதுகுறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வமான கடிதமும் மேற்கண்ட கல்வி அமைப்புகளிலிருந்து கிடைக்கப் பெறவில்லை. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் எப்போது நடைபெறும் என்றும் அது எத்தனை நாள் நடைபெறும் என்பது சபாநாயகர் முடிவாகும். அதுகுறித்த அலுவலக கூட்டத்தையும் சபாநாயகர் கூட்டியிருக்கிறார். எனவே அது குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பேட்டியின்போது உடனிருந்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம், ‘மாணவர்கள் அரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளதை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறியிருப்பதை பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்துதமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியதாவது:-
கல்லூரி இறுதி பருவத்தேர்வு குறித்து நீதிமன்ற தீர்ப்பின்படியே இறுதி பருவத்தேர்வு நடைபெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்வழியே மாணவர்களுக்கு இறுதி பருவத்தேர்வு நடைபெறும் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு விதித்த விதி முறைகளை பின்பற்றுவதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழு வகுத்துள்ள விதி முறைகளை பின்பற்றி தான் மற்ற தேர்வுகளுக்கு தமிழக அரசு விலக்கு அளித்தது. மற்றபடி தற்போது அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் குறித்து வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை. அது தொடர்பாக எந்த கடிதமும் இதுவரைக்கும் அரசுக்கு வரவில்லை. ஒருவேளை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதம் வந்திருக்கிறது என்றால், அவர் இதுகுறித்து கவுன்சிலுக்கு என்ன கடிதம் எழுதியுள்ளார் என்பதை பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.