குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் நிலவக் கூடிய வானிலை தொடர்பாக சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அந்த அறிக்கையில்,
வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையில் மேகமூட்டம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சி (நீலகிரி) 18 செ.மீ., மேல் பவானி (நீலகிரி) 12 செ.மீ., வால்பாறை (கோவை ), தேவலா (நீலகிரி) தலா 11 செ.மீ., சின்னக்கல்லாறு (கோவை) 10 செ.மீ., சின்கோனா (கோவை), சோலையாறு (கோவை) தலா 9 செ.மீ., பெரியாறு (தேனி), பந்தலூர் (நீலகிரி) தலா 6 செ.மீ., வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம் (கோவை ) 5 செ.மீ., கொட்டாரம் (கன்னியாகுமாரி), சிவலோகம் (கன்னியாகுமாரி), தேக்கடி (தேனி) தலா 4 செ.மீ., பாபநாசம் (திருநெல்வேலி) 3 செ.மீ. மழை பெய்தது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
செப்டம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 21 ,22 ஆகிய தேதிகளில் கேரளா, கர்நாடக , கோவா, மகாராஷ்டிரக் கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் . செப்டம்பர் 23ம் தேதி மகாராஷ்டிரக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் .
செப்டம்பர் 21ம் தேதி அன்று வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 22ம் தேதி அன்று தென்மேற்கு ,மத்திய மேற்கு , வட மேற்கு வங்கக் கடல் , மற்றும் அதனை ஒட்டிய தமிழக, ஆந்திர, ஒடிசா கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.